அனைவருக்கும் நன்றி தெரிவித்த ‘பாரதி கண்ணம்மா’ அருண் பிரசாத்

118
‘பாரதி கண்ணம்மா’ தொடரின் கதாநாயகனாக நடித்த அருண் பிரசாத் உருக்கமான விடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த தொடர் முடியவுள்ளதைத் தொடர்ந்து உடன் நடித்த நடிகர், நடிகைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் பதிவிட்டுள்ள விடியோவுக்கு பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019ஆம் ஆண்டுமுதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் ஆரம்பத்தில் மிகுந்த விமர்சனங்களை சந்தித்தாலும், காலப்போக்கில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக பாரதியிடமிருந்து பிரிந்து வீட்டை விட்டுச் செல்லும் கண்ணம்மா, சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். பாரதி பாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் அருண் பிரசாத்துக்கு முகத்தில் எக்ஸ்பிரஷேனே வரவில்லை. ஒரே மாதிரியாகவுள்ளது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.
டிஎன்ஏ பரிசோதனை மூலம் தொடரின் எபிஸோடுகள் இழுக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும் பாரதி கண்ணம்மா தொடர் விஜய் தொலைக்காட்சியின் தொடர்களில் முதல் 10 இடங்களில் இருந்தது. இந்த தொடரில் முதலில் ரோஷினி ஹரிபிரியன் நடித்து வந்தபோது அதிக வரவேற்பு இருந்தது. அவர் விலகியதைத் தொடந்து, வினுஷா தேவி நடித்து வருகிறார். இந்த தொடரில் பல முதன்மை பாத்திரங்கள் அவ்வபோது மாறியுள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் கடந்து தற்போது இந்த தொடர் வெற்றிகரமாக நிறைவை நோக்கி நகர்ந்துள்ளது.

இதனிடையே தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போது அனைவரையும் விடியோ எடுத்து அதனை உருக்கமாக பதிவிட்டுள்ளார் பாரதி கண்ணம்மா தொடரின் கதாநாயகன் அருண் பிரசாத்.

அதில், உடன் நடித்த அனைவரையும் குறிப்பிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ”பாரதி கதையிது கண்ணம்மா.. கண்ணம்மா…” என்ற தொடரின் பாடல் பின்னணியில் கேட்க அனைவருக்கும் கைக்கூப்பி அருண் பிரசாத் நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் பேசிய பாரதி கண்ணம்மா தொடரின் இயக்குநர் பிரவின் பென்னட், எல்லாருக்கும் நன்றி. நான்கரை ஆண்டு பயணத்தை வாழ்க்கையில் மறக்க முடியாது. பாரதி கண்ணம்மா தொடர் பல இன்னல்களைக் கடந்து வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த தொடரில் நாயகனைத்தவிர மற்ற அனைவருமே மாறினர். நாயகனின் அம்மா, அப்பா பாத்திரங்கள் மாறாமல் இருந்தன. இதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
பல தடைகளைக் கடந்து வெற்றிகரமான முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரதி கண்ணம்மா முடிவடைகிறது. ஆனால் இது முதல் அத்தியாயம் மட்டுமே. தொடர்ந்து செல்வோம் என்று குறிப்பிடும்போது படக்குழுவினர் அனைவருமே கண்ணீருடன் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
SHARE