ஐபிஎல் : ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்

104
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ம் திகதி தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் உள்ளூர் மைதானம், வெளியூர் மைதானங்களில் லீக் ஆட்டங்களில் விளையாடுகின்றன. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூர் மைதானமான சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் 7 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளது. முதல் ஆட்டம் ஏப்ரல் 3ம் திகதி நடக்கிறது. இதில் சிஎஸ்கே அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 27ம் திகதி தொடங்குகிறது. மார்ச் 27ம் திகதி காலை 9.30 மணி முதல் ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் விற்பனை நடைபெறும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் விலை ₨.1,500 முதல் ₨.3,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செல்போன் தவிர மற்ற பிற மின்னணு சாதனங்களை மைதானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. ஹெல்மெட், லேப்டாப் பைகள், குடை அல்லது பிற பைகள் மைதான வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாது. பொருட்களை வைக்க மைதானத்தில் லாக்கர்கள் எதுவும் இல்லை.

டிக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நுழைவு மற்றும் வாயிலை கவனமாக பார்த்து அந்த வாயில் வழியாக செல்ல வேண்டும். கவுண்டர் அல்லது ஆன்லைன் வாயிலாக, ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

கலைவாணர் அரங்கம் பார்க்கிங் பகுதி, பொதுப்பணித்துறை பார்க்கிங் பகுதி (பி.பட்டாபிராம் கேட் அல்லது வாலாஜா சாலை), சென்னை பல்கலைக்கழக வளாகம், ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி வளாகம் ஆகிய பகுதிகளில் கார் பார்க்கிங் மற்றும் இருசக்கர வாகன பார்க்கிங் வசதி உள்ளது.

SHARE