ஜனாதிபதி ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – 10 அரசியல் கட்சிகளும் தீர்மானம் !

233

சர்வகட்சி அரசாங்கம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி அளிக்கும் பதிலின் அடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து தீர்மானம் எடுப்போம் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் 10 கட்சிகளுக்கு இடையில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் தமது யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாணயக்கார தெரிவித்தார்.

நாட்டின் இறைமையையும் தேசிய வளங்களையும் பாதுகாத்து ஜனாதிபதி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதே தமது பிரதான கோரிக்கை என கூறினார்.

வேலைத்திட்டம் இன்றி அனைத்துக் கட்சி அரசாங்கத்தினால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

SHARE