பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் கலந்துரையாடல்

56
உலகில் முன்னணி சேவை நிறுவனங்களுள் ஒன்றான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊடாக, மலையகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (31) அமைச்சில் நடைபெற்றது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, அமைச்சரின் ஆலோசகர் ஹரித்த விக்ரமசிங்க, பிரத்யேக செயலாளர் மொஹமட் காதர் ஆகியோரும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊடாக இலங்கையில் முன்னெடுக்க கூடிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் இதன் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் சிறார்களுக்கான போசாக்கு உணவு, சுகாதார மேம்பாடு மற்றும் நவீன தொழில் நுட்பங்களை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், நீர்வழங்கலை டிஜிட்டல் மயமாக்குதல் உள்ளிட்ட சில விடயங்கள் பற்றியும் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

தலைமையகம் ஊடாக கலந்துரையாடி, முன்னேற்றகரமான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் அமைச்சரிடம் இதன்போது உறுதியளித்தனர். – ada derana

SHARE