எவ்வாறாயினும், கொலன்னாவ பெற்றோலிய முனைய வளாகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஏகபோக அதிகாரத்தையும், பெற்றோலியம் இறக்குமதியை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோலிய ஊழியர்கள் நேற்று (27) காலை முதல் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
எனினும், அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்காததால், இன்று (28) பிற்பகல் 2 மணி அளவில், சத்தியாக்கிரகத்தை முடித்துக் கொண்டு, அவசர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, பெற்றோலிய ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அவசர தொழிற்சங்க நடவடிக்கையினால் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தடைபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய ஊழியர்களின் பணியை சீர்குலைக்கும் ஊழியர்களுக்கு எதிராக பணிநீக்கம் மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனைய தலைவருக்கே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். – ada derana