மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
புதிய ஜனாதிபதியின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு கோரிக்கைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா ஆகியோரின் புகைப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிந்த பதாதைகளில் காணப்பட்டன.
2011, 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் கிழக்கு, தென்கிழக்கு, யாழ்ப்பாணம் உட்பட நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலிருந்தும் பட்டதாரிகளாக வெளியேறியவர்களே இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை சம்பவ இடத்துக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்;ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், மா.நடராசா,ஞா.வெள்ளிமலை ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகர் ஊடாக பேரணியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் உ.உதயவேந்தன்,
தமது நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாங்கள் இன்று பல துன்பங்களுடன் வாழ்ந்து வருகின்றோம்.
அவற்றினை கருத்தில் கொண்டும் எமது நிலையின் உண்மைத் தன்மையும் கருத்தில் கொண்டு உடனடியாக புதிய அரசாங்கம் தமது நூறு நாள் வேலைத்திட்டத்தில் எங்களுக்கு அரச நியமனத்தினை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.
நாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றோம். உறுதிமொழிகள் வழங்கப்படுகின்றது. ஆனால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு பின்னர் அது இடைநிறுத்தப்பட்டது என தெரிவித்தார்.
மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தாத பேரவை உறுப்பினர்களை நீக்குமாறு கோரிக்கை
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பல மோசடிகளைக் கண்டும் காணாமலும் மாணவர் நலனில் அக்கறை செலுத்தாத முன்னைய பேரவையில் அங்கம் வகித்து மீண்டும் நியமனம் பெற்ற உறுப்பினர்களை நீக்குமாறு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.
மாணவர் நலனில் அக்கறை செலுத்தாத பேரவை உறுப்பினர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில்,
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2015ம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் கடந்த வருடம் பேரவையில் இருந்து கொண்டு அதிகாரத் துஸ்பிரயோகம் செய்து பலமுறைகேடுகள் இடம்பெறக் காரணமாக இருந்த மூதவை உறுப்பினர்கள் இருவர் மீண்டும் தெரிவாகியுள்ளனர்.
குறித்த இரு உறுப்பினர்களும், பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிர்வாகம் மேற்கொண்ட போது அதற்கு ஆதரவாகவும் செயற்பட்டனர்.
அதேவேளை இவர்களில்!
1. ஒருவர் வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின் வருகை தரு விரிவுரையாளராகவும், பேரவை உறுப்பினராகவும் எவ்வாறு செயற்பட முடியும்?. பேரவை இடம் பெறும் வேளையில் குறித்த பேரவை உறுப்பினர் மது அருந்துவதாக எமக்கு கிடைத்த தகவலை அடுத்து நாங்கள் அவரை கண்காணிக்க தொடங்கினோம். அது உண்மை என்பதையும் அறிந்து கொண்டோம். ஒரே நேரத்தில் இரு வேலைகள் செய்வதுடன் உபவேந்தருக்கு விசுவாசமாகவும் செயற்பட்டார்.
2. கடந்த பேரவையில் அங்கம் வகித்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மறைமுகமாக கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விநியோகஸ்த்தராகவும், வழங்குனராகவும் தொழில்பட்டார் என்பதாக அறிந்தோம். இவர் இங்கு இடம் பெற்ற மோசடிகளை அறிந்தும் அறியாமல் தொழில்பட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட 156 பக்க முறைகேடுகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முறைகேடுகள் இடம் பெற்ற காலப்பகுதியிலும் இவர்கள் பேரவையின் உறுப்பினர்களாக செயற்பட்டனர்.
எனவே இருவரையும் 2015ம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்குமாறு மாணவர் ஒன்றியம் வலியுறுத்துகின்றது.
எமது பல்கலைக்கழகப் பேரவை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கௌரவம், சமூக அபிவிருத்தி, மாணவர் கல்வி மற்றும் நலன் என்பவற்றுக்கு மேலாக எமது கலாச்சாரப் பாரம்பரியத்தை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டுமே தவிர பேரவை உறுப்பினர்களின் தனிப்பட்ட நலன்களை அடைவதற்காக செயற்படுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
எமது பல்கலைக்கழகப் பேரவையானது சமூகசேவை ஆர்வலர்கள் மற்றும் புத்திஜீவிகளின் பங்களிப்பு அவசியமே தவிர அரசியல் மயப்பட்டதாகவோ வெளி அமைப்பினரது சுயநல தன்மை கொண்டதாகவோ அமைவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
• பேரவையின் புதிய பெயர் பட்டியலைத் தயார் படுத்தியர்கள் யார்?
• கடந்த காலத்தல் பேரவை நியாயமாகவும், நேர்மையாகவும் கடமையாற்றிய பேரவை உறுப்பினர்களைத் தவிர்ந்து இந்த இரு நேர்மையற்றவர்களை தெரிவு செய்ததன் காரணம் என்ன?
• முறைகேடுகள் இடம் பெற்ற வேளையில் பேரவையின் உறுப்பினர்களாக இருந்தவர்களின் பெயர்களை சிபாரிசு செய்தது யார்?
• சிபாரிசு செய்த இவர்களின் துரநோக்கம் என்ன? கொஞ்சம் சிந்தியுங்கள்!
ஊழலுக்கு எதிரான புதிய ஜனநாயக அரசு கிழக்குப் பல்கலைக் கழகத்தில் அதிகார துஸ்பிரயோகம் மற்றும் முறைகேடுகள் இடம் பெற்றவேளையில் பேரவையின் உறுப்பினர்களாக இருந்தவர்களை மீண்டும் பேரவையின் பெயர் பட்டியலிலும் இணைத்து அனுமதி அளித்தமை ஊழலுக்கு எதிரான புதிய ஜனநாயக அரசாங்கத்தின் மீது எமக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
இதுதானா புதிய அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான நல்லாட்சி?
கடந்த பேரவையில் இருந்த உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளுர் அரசியல் தலைவர்கள் மற்றும் மத்திய அரசில் அங்கம் பகிக்கும் பலருக்கும்; இவர்கள் தொடர்பான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்பும் இவர்கள் புதிய பேரவையில் இடம் பெற்றது எவ்வாறு?
குறிந்த இருவரையும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு பல்கலைக்கழக அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்யக் கூடியவர்களை எந்த விதமான இன, மத வோறுபாடு இன்றி நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாணவர் ஒன்றியம் கேட்டுக் கொள்கின்றது.
கிழக்கு மாகாணம் 3 மாவட்டங்களை உள்ளடக்கிய போதிலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் திருகோணமலையில் இருந்தும் கடந்த காலங்களில் பேரவை உறுப்பினர்கள் எவரும் திருகோணமலையில் இருந்து தெரிவு செய்யப்படாத நிலையில் “முன்னைய பேரவையின் உறுப்பினர்கள் இருவருக்கும் பதிலாக நியமிகப்படுபவர்களில் ஒருவர் திருகோணமலை மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் அமைய வேண்டுமென கிழக்குப் பல்கலைக் கழகம் மாணவர் ஒன்றியம் வேண்டுகின்றது.”
அவ்வாறு இரு உறுப்பினர்களையும் புதிய பேரவையில் இருந்து நீக்காத விடத்து மாணவர்களின் தொடர் போராட்டம் மூலமாக அவர்களை நீக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சம்மந்தப்பட்ட உறுப்பினர்களே உங்களுக்கு ஓர் வேண்டுகோள் நீங்களாக பேரவையில் இருந்து விலகிக் கொள்வது பின்வரப்போகும் போராட்டங்களையும் கடந்த காலங்களில் பேரவை பற்றிய பல இரகசியங்கள் வெளிவராமல் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும் என கூறிக் கொ
ள்கின்றோம்.
எமது இந்த கோரிக்கையினை அதிமேதகு ஜனாதிபதி அவர்களினதும், கௌரவ உயர் கல்வி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.