எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ளது. நேற்று நடந்த கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை இன்று மாலை அல்லது நாளை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி இதனை அறிவிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் முடிவை அறிக்கையாக தயாரித்து, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும் பொறுப்பை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டம் நேற்று நடந்தது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும், இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதென முடிவு செய்து, அவருடனான சந்திப்புக்களை ஏற்கனவே நடத்தி முடித்து விட்ட நிலையில், நேற்றைய கூட்டம் பெருமளவில் சம்பிரதாயமான ஒன்றாகவே இருந்ததாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏஃசுமந்திரன் தெரிவித்துள்ளார். மைத்திரிக்கான ஆதரவில் கூட்டமைப்பு கட்சிகளிற்கிடையில் ஒருமித்த நிலை காணப்படாததால், தலைவர் சம்பந்தன் அவர்களை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த கூட்டம் நடந்ததென்றார்.
மாற்றம் அவசியம்
இந்தக்கூட்டத்தில் பேசிய அனைவரும் ஆட்சி மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நல்லிணக்க நடவடிக்கைகளில் அக்கறை காட்டாததுடன், தமிழர்கள் விடயத்தில் வீம்புடன் நடந்து கொள்வதாக இரா.சம்பந்தன் குற்றம்சாட்டினார். தாம் தேவையானளவு சாதகமான சமிக்ஞைகளை காட்டியபோதும், மகிந்த ராஜபக்ச அவற்றை பொருட்படுத்தவில்லை. உயர்பாதுகாப்பு வலயம், காணி விடயம், அரசியல் கைதிகள் விடயம், வடமாகாணசபையின் நிர்வாக பிரச்சனை போன்றவற்றில் அரசு நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அதனால் மாற்றம் ஒன்று அவசியம். இதனடிப்படையில் மைத்திரியை ஆதரிப்போம் என சம்பந்தன் கூறினார்.
எனினும், இதற்கு கூட்டணி கட்சிகள் சிறிய அதிருப்தியை வெளிப்படுத்தின. இந்த நிலைமையில் மாற்றத்தை கொண்டு வருவார் என மைத்திரியை எவ்வாறு நம்பலாம். அவர் ஏதாவது உத்தரவாதம் தந்தாரா என அவர்கள் கேட்டனர். தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படும் வரலாறு மீண்டும் ஏற்படாதென்பதற்கு என்ன உத்தரவாதமென அவர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
கனவான் ஒப்பந்தம்
இதற்கு பதிலளித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழர்களிற்கு பிரச்சனை உள்ளதென்பதையும், அவற்றை தமது ஆட்சிக்காலத்தில் தீர்த்து வைப்பேன் என்றும் மைத்திரி உறுதியளித்துள்ளார். அது கனவான் ஒப்பந்தம் என சம்பந்தன் கூறினார்.
“அந்த ஒப்பந்தத்தை எழுத்துமூல ஆவணமாகவும் செய்து கொள்ள மைத்திரி தரப்பு தயாராக இருந்தது. ஆனால் நாம்தான் அதற்கு சம்மதிக்கவில்லை. சந்திரிகாவின் கனவான் தனத்தில் நம்பிக்கையிருந்ததால் வாய்மூல உறுதிமொழி போதுமென்றேன். எழுத்துமூல ஒப்பந்தத்தை வேண்டாமென்றதற்கு காரணம், சரத்பொன்சேகா போட்டியிட்டபோது, கூட்டமைப்பை காட்டி எப்படி சிங்கள வாக்குகளை பெற்றார்களோ, அதுபோல அம்முறையும் நடக்கும். மகிந்த ராஜபக்ச நிச்சயம் அதனை செய்வார். எனவேதான் எழுத்துமூல ஒப்பந்தம் வேண்டாமென்றேன்.
அப்படியொரு ஒப்பந்தத்தை நாம் செய்து, விடயம் கசிந்து, அரசு அதனை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தினால், எமது மக்கள் ஒப்பந்தம் செய்தீர்களா என எம்மிடம் கேட்பார்கள். நாம் பொய் சொல்ல முடியாது. ஓம் என்றால், அரசுக்கு வாய்ப்பாகிவிடும்” என சம்பந்தன் விளக்கமளித்தார். இதனையடுத்து இந்த விடயம் முவுக்கு வந்தது.
காசு விவகாரம்
கடந்த கூட்டங்களில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்ததிருந்தது. எதிரணியிடமிருந்து கூட்டமைப்பு வாங்கிய காசு விவகாரம். இந்தக்கூட்டத்திலும் அது பிரஸ்தாபிக்கப்பட்டது. ஆறுகோடிரூபா வாங்கப்பட்டதாக கூறப்படுவதை சம்பந்தன் நிராகரித்தார். வாக்களிப்பு நிலையங்களில் பணியாற்றுபவர்களை ஒழுங்கு செய்வதற்காக 25 இலட்சம் ரூபா பணம் தந்தார்கள் என்று சம்பந்தன் கூறினார். வாங்கிய பணத்தை முகவர்களிற்கு பகிர்ந்தளித்து விட்டோம் என்றார்.
எனினும், அதுபற்றிய முழுமையான கணக்கறிக்கை தயாரிக்க வேண்டுமென ஏனைய உறுப்பினர்கள் வற்புறுத்தவே, அதற்கு இணக்கம் காணப்பட்டது.
நாளை யாழில் நடக்கும் மைத்திரியின் பிரசாரகூட்டத்தில் கூட்டமைப்பினர் பங்கு பற்றுவதில்லையென்றும், கிராமம் கிராமமாக சென்று, மைத்திரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதென்றும் நேற்று முடிவு செய்யப்பட்டது.
மைத்திரியை ஏன் ஆதரிக்கிறோம் என்பதை அறிக்கையாக தயாரித்து, அதனை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி வெளியிடும் பொறுப்பு சம்பந்தனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.