ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

99

 

மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை மாணவர்கள் உணவின்றி மயக்கமடைந்துள்ளதாக சில அதிகாரிகள் கூறியதை அடுத்தே சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட வேண்டாம் என இலங்கை அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திச்சேவை ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் 1.5 மில்லியன் அரச ஊழியர்களுக்கு இது தொடர்பில் அரசாங்கம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரச பணியாளர்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளிப்படுத்துவது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

உணவுப் பற்றாக்குறையால் பாடசாலைகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மயக்கமடைந்து வருவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் கூற்றுகளைத் தொடர்ந்து இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

அரசியல் உந்துதல் காரணமாகவே பொது சுகாதார ஊழியர்கள் நிலைமையை பெரிதுபடுத்துவதாக அவர் குற்றம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், உலக உணவுத் திட்டம் தனது சமீபத்திய அறிக்கையில், ஆறு மில்லியன் இலங்கையர்கள், அதாவது நாட்டின் சனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர், உணவு பாதுகாப்பற்றவர்கள் என்றும் அவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவை என்றும் கூறியுள்ளமையை வெளிநாட்டு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

SHARE