நடிகை ரம்பா தன் கணவருடன் சேர்த்து வைக்ககோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். 1990ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் நடிகை ரம்பா.
தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கும், கனடா தொழிலதிபரான இந்திரன் பத்மநாபனுக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் சேர்த்து வைக்ககோரி இன்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த சில வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நிலையில் குழந்தைகளை பார்த்து கொள்வது சிரமமாக இருப்பதாகவும், குடும்ப வாழ்க்கையை தற்போது புரிந்து கொண்டுள்ளதாகவும் கருணை அடிப்படையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி குறிப்பிட்டுள்ளார்.
ஆண்வாரிசு பெற்றுக்கொடுக்கவில்லை என்ற காரணத்தினால் கணவரும், அவரது குடும்பத்தினரும் மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.