தமிழரசு கட்சியில் உள்ளவர்கள் வந்தேறிகள் இவர்களே தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்தார்கள்

263
தமிழரசு கட்சியில் உள்ளவர்கள் வந்தேறிகள் இவர்களே தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்தார்கள்
முன்னாள் வடமாகாணசபை விவசாய அமைச்சர் க.சிவநேசன் (பவான்) அவர்களுடனான சிறப்பு நேர்காணல்

கேள்வி : இன்றைய சமகால அரசியல் பார்வையிலே உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக தற்பொழுது பரபரப்பாக சிங்கள பரப்பிலே கட்சிகள் தமக்கான வேலைத் திட்டங்களை செய்துகொண்டிருக்க தமிழ் தேசிய கூட்டமைப்பாக இயங்கி வந்த தமிழரசுக்கட்சி தற்பொழுது தன்னிச்சையான முடிவெடுத்தாக பலராலும் பார்க்கப்படுகின்றது. தற்பொழுது ஒரு அறிவித்தலை கொடுத்திருக்கின்றார்கள் தற்பொழுதிருந்த ரெலோவையும் புளொட்டையும் தனித்து போட்டியிட்டு மீண்டும் இணையுமாறு ஒரு கருத்தை தெரிவித்திருக்கின்ற நிலையிலே அப்படியெனில் தமிழரசுக் கட்சி என்று நீங்கள் யாரை குறிப்பிடுவீர்கள்? அதாவது வந்தேறிகள் இருக்கின்றார்கள் என்றால் யார் அந்த வந்தேறிகள் இவர்களது கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு தான் மாவை சேனாதிராஜா ஆளுமையற்ற முடிவுகளை எடுப்பதாக உங்களது கருத்துக்கள் இருக்கின்றதே யார் அவர்கள்?

பதில் : தமிழரசுக் கட்சியை பொருத்தவரையிலே ஆரம்பக்காலங்களில் இருந்து தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியில் செயற்பட்டு வருபவர்கள் என்று கூறுகின்ற பொழுது பல கேள்விகள் இருக்கின்றன. இன்று தமிழரசுக்கட்சியில் ஆளுமையிருப்பவர்கள் யார் என்ற ஒரு கேள்விக்குறி இருக்கின்றது. அவர்கள் தொடர்ந்தும் தமிழரசுக்கட்சியில் பயணிப்பவர்களா அல்லது புளொட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களா என்பதும் உதாரணமாக மன்னாரை பொறுத்தவரையிலே இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர் புளொட்டிலிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சிக்கு சென்றவர். அதற்கு முன்னர் அவருக்கும் தமிழரசுக் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இருந்தது இல்லை.

அதைப்போன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இருந்து வெளியேறி அவர் தொடர்ந்து தமிழரசுக் கட்சியில் இருந்து இன்று மத்தியக்குழுவில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.முல்லைத்தீவை பொறுத்தவரையில் ரவிகரன்  அவர்கள் மாகாணசபையிலே ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினுள்ளே வந்து அதிலிருந்து வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டு ஏதோவொரு காரணத்தினால் அவர் இன்று தமிழரசுக் கட்சியில் மாவட்டத்தினுடைய செயற்பாட்டாளராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். கிளிநொச்சியை பொறுத்தவரையிலே சிறிதரன் அவர்கள் ஆரம்பத்திலே ஈ.பி.ஆர்.எல்.எப் ஊடாகத்தான் அரசியலின் உள்ளே புகுந்தவர். இன்று தாங்கள் தமிழரசுக் கட்சியின் தலைமை போக்கு தனக்கு வேணும் என்று கேட்குமளவிற்கு வளர்ந்திருக்கின்றார்.

சிறிதரன் அவர்களும் வேறு கட்சியிலிருந்து வந்தவர் சாந்தி சிறிஸ்கந்தராசாவை பொறுத்தவரை அவருடைய குடும்பம் அவருடைய கணவர் அனைவருமே ஆரம்ப காலத்தில் புளொட்டினுடைய செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார்கள். அதன்  பின்னர் தமிழரசுக் கட்சிக்கு போனதன் பின்பு தமிழரசுக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளராக இருக்கின்றார்கள். அது மட்டுமல்ல சாணக்கியனை  பொறுத்தவரையிலே ஆரம்பத்தில் அவரது தந்தையாரின் காலத்திலே இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அண்மைக்காலத்திலே சாணக்கியன் மிக இளைஞராக வந்து தேர்தலிலே முதன்முதலில் நின்ற கட்சி என்றால் அது மகிந்த ராஜபக்சவினுடைய வெற்றிலை சின்னத்தை கொண்ட சிறிலங்கா சுதந்திர கட்சியிலே போட்டியிட்டு தேசியத்திற்கு எதிராக அந்த வாக்கை சிதறடித்ததன் பின்பு இன்று மீண்டும் அவர் தமிழரசுக் கட்சியினூடாக வந்ததனால் அவரும் இன்று தமிழரசுசக் கட்சியினுடைய முக்கியமான செயற்பாட்டாளராக இருக்கின்றார்.

அதைத்தவிர உங்களுக்கு தெரியும் போராட்டங்கள் எல்லாவற்றையும் தாண்டி யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்பு கொழும்பிலே செயற்பட்டுக்கொண்டிருந்த யு.என்.பி யினுடைய ஆளுகைக்கு கீழ் செயற்பட்டுக்கொண்டிருந்த சுமந்திரன் இன்று தமிழரசுக் கட்சியின் ஒரு மிகமுக்கியமான பேச்சாளர் மட்டுமல்ல அடுத்தகட்ட தலைவர் தான் தான் என்று கூறுமளவிற்கு வளர்ந்திருக்கின்றார். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது இவர்கள் தான் இன்று இருக்கின்ற முக்கிய செயற்பாட்டாளர்களாக இருக்கின்றவர்கள். அப்படியிருக்கும்  பொழுது இவர்களை நீங்கள் எப்படி தமிழரசுக்கட்சியில் வழிவந்தவர்கள் என்று கூறமுடியும். இன்று தமிழரசுக் கட்சி என்பது நிச்சயமாக வந்தேறிகளினால் வந்து ஆளுமைப்படுத்தப்பட்ட கட்சியாகும். இதில் மிக வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் மிக நீண்டகாலமாக செயற்பட்டுவந்த மாவை சேனாதிராஜா மற்றும் புரொக்டர் தவராசா போன்றோர் வேதனைப்பட்டு கூறுகின்றார்கள். தாங்கள் இந்த கூட்டை உடைக்கக்கூடாது என்பதற்காக எல்லோரிடமும் மன்டியிட்டு இறங்கி கேட்டோம்  அப்படி செய்து விடாதீர்கள் என்று கேட்டும்கூட தங்களது கருத்து இதில் எடுபடவில்லை என்று சொன்னார்கள்.

கேள்வி : அவர்கள் எதற்காக அப்படி கேட்டார்கள்? ஆயுத கட்சிகளுடன் இணைந்து பயணிக்க முடியவில்லையா அல்லது அவர்கள் வன்முறையாளர்கள் கருத்தை பரப்பி அல்லது வாக்குகளை சேகரிக்க முடியாத ஒரு சூழல் என்பதற்காகவா அல்லது என்ன காரணம்?

பதில் : ஒவ்வொருவரினதும் பின்னணிகளையும் நாம் எடுத்துப்பார்க்க வேண்டும். இவர்களது பின்னணிகள் என்ன என்பது எமக்கு சந்தேகத்;திற்குரிய விடயம். இவர்கள் யாரினுடைய அஜந்தாவிற்கு கீழே இவர்கள் வேலை செய்கின்றார் என்பதை நாம் ஆராய வேண்டிய விடயம். எனவே அதன் பின்பு தான் நாங்கள் சரியான முடிவை எடுக்க முடியும். இவர்கள் தமிழரசுக் கட்சி தானா அல்லது தமிழரசுக் கட்டியினுடைய கருத்தியல் தான் இந்த பிரிந்து சென்று செயற்படும் முடிவா என்பதை எல்லாம் அதன் பின்பு தான் நாங்கள் ஆராய முடியும். எனவே நாங்கள் தொடர்ந்து இப்படியான ஊடுறுவிகளால் மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களை விடுத்து நாங்கள் தமிழ் தேசிய தரப்பிலே இருக்கின்றவர் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் மத்தியிலே சரியான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஒற்றுமை என்பது தேர்தலுக்கான கட்டமைப்பு இல்லை. இவர்கள் சொல்வது போன்று எந்தவிதமான எந்த டெக்னிகல் ரீசனும் கிடையாது. தமிழ் மக்கள் ஓரணியில் திரள்வதற்கு டெக்னிக்கல் ரீசன் என்ன இருக்க முடியும்.

கேள்வி : விகிதாசார அடிப்படையிலான விடயத்தை தான் தேர்தல் உத்தி (Technic) என்கின்றார்கள்.

பதில் : அது நீங்கள் தேர்தல் பற்றி கதைக்கின்றீர்கள் ஆனால் எந்த கட்சி தங்களது யாப்பிலே எங்களது நோக்கம் தேர்தல் தான் என்று சொல்லியிருக்கின்றது. அப்படி தமிழ் தேசிய தரப்பில் உள்ள கட்சி ஏதாவது நீங்கள் கூறுங்கள். தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை இன்று எல்லாவற்றையும் தான்டி தாயகமும் இல்லை தேசியமும் இல்லை சுயநிர்ணய உரிமையும் இல்லை சமஷ;டி இல்லை தற்பொழுது நாங்கள் கேட்டுக்கொண்டிருப்பது 13 வது திருத்த சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள் என்னும் அளவிற்கு இன்று தமிழ் தேசியம் பிளவுபட்டிருக்கின்றது. அதற்கு மேல் கேட்கமுடியாது இருப்பதற்கு காரணம் இந்த பிளவு தான் இந்த பிரிவினை தான்.

ஆகவே இந்த பிரிவினையை நாங்கள் தவிர்த்து தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரள்வதன் மூலம் தான் நாங்கள் தமிழ் மக்களுக்கான உண்மையான குறைந்தபட்ச அதிகாரங்களையேனும் பெற்றுக்கொள்ள முடியுமே தவிர இந்த டெக்னிக்கல் ரீசனால் அங்கு ஒன்றும் வரப்போவதில்லை. தந்தை செல்வா காலத்தில் எல்லா மக்களும் சேர்ந்து போட்டியிட்ட போது அமிர்தலிங்கம் காலத்தில் எதிர்கட்சி தலைவராக வரக்கூடிய சூழல்  இருந்தது. அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் பின்னணியில் சேர்கின்றபொழுது 68 வீதமான வாக்குக்கள் எடுக்கக்கூடியதாக இருந்தது.

ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளால் 68 வீதமான மக்களை திரட்டி ஒற்றுமையை ஏற்படுத்திக்கொடுத்து விட்டுத்தான் அவர்கள் போனார்கள். ஏறக்குறைய பெரும்பான்மையான தமிழ் மக்களை ஓரணியில் திரட்டி இவர்களின் கையில் கொடுத்துவிட்டு போனார்கள். இன்று கடந்த தேர்தலில் 32 வீதமாக அதை ஆக்கிவிட்டு டெக்னிக்கல் ரீசன் என்று கூறினால் என்ன டெக்னிக்கல் ரீசன் அதில் இருக்கின்றது. அதை சரியான முறையிலே நீங்கள் கூறுங்கள்.

கேள்வி : இதில் தேர்தல் உத்தி (Technic) என்று நீங்கள் கூறுவது போன்று ஒன்றுமில்லை. ஆனால் இவர்கள் அதிலே ஒரு வடிவத்தை கொடுக்கின்றார்கள் தொடர்ந்தும் நாங்கள் ஆயுத கட்சிகளை உள்வாங்கிக்கொண்டு  இவ்வாறானதொரு பயணிப்பை பயணிப்போமாக இருந்தால் இதைவிடவும் மிகமோசமான தேர்தல் தோல்விகளை நாங்கள் சந்திக்க நேரிடும் என்பது அவர்களின் கருத்து. காரணம் என்னவென்றால் இவர்கள் ஒரு வன்முறை கலந்த கட்சிகளாக இருக்கின்றார்கள் என்பது இதைத்தான் அவர்கள் அடிக்கடி மக்கள் முன்னிலையில்கூட கூறுகின்றார்கள். 

பதில் : இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தேர்தல் மட்டுமில்லை என்பதனை நீங்கள் கூறுகின்றீர்கள் அப்படியிருக்கும் பொழுது ஏன் தேர்தல் டெக்னிக்கல் ரீசனை இதற்குள்  கொண்டுவந்து செருகுகின்றீர்கள். இதில் ஒரு கட்சியினுடைய கொள்கையும் இல்லையே. போராட்டம் மௌனிக்கப்பட்டது இருக்கட்டும் ஆனால் எந்த கட்சியாவது எங்களது தனி நோக்கம் தேர்தல் தான் என்று வெளிக்கிட்டிருக்கின்றதா? இல்லை. நாங்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து தமிழ் தேசிய பரம்பிலே இருக்கின்ற அனைத்து மக்களையும் அணி திரட்டி அந்த மக்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான ஒரு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகத்தானே எல்லா கட்சியும் தங்களது யாப்பை வடிவமைத்திருக்கின்றது. அப்படி வடிவமைத்த நீங்கள் ஏன் தேர்தலுக்காக பிரிகின்றீர்கள். தமிழரசுக் கட்சியின் யாப்பில் என்ன சொல்லியிருக்கின்றது சமஷ;டி முறையிலான பிரிக்கப்படாத வடக்கு கிழக்கு இணைந்த தாயக கோட்பாட்டை அவர்கள் சொல்லுகின்றார்கள். எனவே இந்த தாயக கோட்பாட்டிற்கு தேர்தல் தானா முக்கியம். இல்லையே அதற்கும் இதற்கும் சம்மந்தமில்லை. கட்சியின் யாப்பை இப்படி வைத்துக்கொண்டு ஏன் அதனை உடைக்கும் நோக்கில் தமிழ் தேசியத்தை பலவீனமாக்கும் விதமான செயற்பாட்டை நீங்கள் செய்கின்றீர்கள்? என்னத்திற்காக இந்த பின்னடைவு. தமிழரசுக் கட்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களினது பின்னடைவை சொல்லுகின்றீர்கள் அப்படித்தானே. எனவே இதில் என்ன கொள்கை அடிப்படையிலான ரீசன் இருக்கின்றது.

கேள்வி : உள்வாங்கப்பட்ட ஏனைய கட்சிகளில் தங்களை முந்திக்கொண்டு செல்வதான ஒரு நிலைப்பாடு இருக்கின்ற பொழுது தான் அவர்கள் அவ்வாறான ஒரு திட்டத்தை முன்னெடுக்கின்றார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. இவர்களின் கொள்கை எல்லாமே தேர்தல் தான் இந்த சூழலில் ஆயுத கட்சிகள் ஒரு முடிவை எடுத்தார்கள் அதாவது ரெலோ புளொட் ஈ.பி.ஆர்.எல்.எப் இந்த மூன்று கட்சிகளும்  

பதில் : ரெலோ புளொட் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகள் மட்டும் ஆயுத குழுக்கள் இல்லை இன்னும் பல ஆயுத குழுக்கள் இருந்தது தான். அனைவரும் ஆயுதத்துடன் போராடியவர்கள் தான். எனவே ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு அரசியல் நிலைமைக்கு வந்தாலும் கூட அவர்களது நோக்கம் என்னவென்று சொன்னால் தேர்தல் நோக்கம் கிடையாது. எந்தவொரு விடுதலைப்புலிகளோ அல்லது ஏனைய இயக்கங்களில் இருந்த எந்தவொரு போராளியும் அல்லது மாவீரர்களாக்கப்பட்டவர்கள் அல்லது மறைந்த போராளிகள் யாருமே இந்த தேர்தலுக்காக உயிரிழக்கவில்லை. தேர்தலுக்காக போராடவுமில்லை. அவர்கள் போராடியதற்கு காரணம் உரிமைப்போராட்டமே தமிழினத்தை அடைய வேண்டும் என்று நினைத்து தான் போராடினார்கள். எனவே குறைந்தபட்சம் நாங்கள் இன்று அரசியல் ரீதியாக தமிழ் மக்களுக்கான உயர்ந்தபட்ச அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் ஒன்றிணைவதை விட்டுவிட்டு தேர்தலுக்காக நாங்கள் டெக்னிக்கல் ரீசனில் பிரிகின்றோம் என்று சொன்னால் அதை யார் ஏற்றுக்கொள்வார்கள்.

கேள்வி : இது அரசாங்கத்தினுடைய பின்னணி என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில் : அதைத்தானே நான் கூறினேன் இந்த ஊடுறுவிகள் எப்படி வந்தார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கின்றது என்று. தமிழரசுக் கட்சியினூடாக வந்திருக்கலாம் அல்லது ஒவ்வொரு கட்சியினூடாகவும் வந்திருக்கலாம். எங்களுடன் இருந்தவர்களை வெளியேற்றும் பொழுது எங்களது கட்சியிலிருந்த கொள்கைகளுக்கு முரணானவர்களை வெளியேற்றுவோம். அல்லது எங்களது கட்சியில் இருந்து முரண்படுகின்றவர்கள் வெளியேறுவார்கள். எனவே முரண்படுகின்றார்கள் என்றால் அவர்கள் வேறு  கருத்தைக்கொண்டிருக்கின்றார்கள் என்று தான் அர்த்தம்.

தொடரும்…
நேர்காணல் – இரணியன்
SHARE