தமிழ்ச் சினிமாப் படப் பாணியில் நடந்திருக்கக்கூடிய இச்சம்பவம் இலங்கையில் தமிழ் ஊடகத்துறையினருக்கு எவ்வாறான அச்சுறுத்தல் நிலவுகின்றது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

380

தமது உயிரையும் துச்சமாக மதித்து ஊடகப்பணியில் ஈடுபட்டுவரும் ஊடகவியலாளர்கள் மீது வன்மத்துடன் பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களின் பணியினை முடக்க முயற்சித்துவரும் அரசாங்கம் இதற்கான விளைவுகளை மிகவிரைவிலேயே அனுபவிக்கும் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.

Arab-Media-Cartoon

காரைநகர் கலாசார மண்டபத்தில் இன்று, வலி.தென்மேற்கு மற்றும் காரைநகர் இளைஞர் சம்மேளங்கள் இணைந்து நடாத்திய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய நிலையில் தாயகப் பகுதியில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மிகப்பாரிய சவால்களை நாளாந்தம் எதிர்கொண்டு வருகின்றார்கள். பெற்றோரை அச்சுறுத்தும் சவால்கள் பலவாக இருந்தாலும் இன்றைக்கு முக்கிய பிரச்சனையாக உருவெடுத்திருப்பது போதைப்பொருள் பாவனையாகும்.

மிகப்பலமான பின்னணியுடன் போதைப்பொருளானது எம்மக்கள் மீது திணிக்கப்பட்டு வருவதாக நான் நம்புகின்றேன். இலங்கை போதைப்பொருள் வர்த்தகத்தின் மையமாக விளங்குவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் அப்போதைப் பொருட்களை தன்களுக்கு எதிரானவர்களைப் பழிவாங்குவதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினர் பயன்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எமக்கு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

நேற்றுமுன்தினம் கூட கொழும்பில் இடம்பெறவிருந்த ஊடவியலாளர் பயிற்சிநெறிக்காக சென்றுகொண்டிருந்த எமது யாழ். மாவட்ட ஊடவியலாளர்கள் ஓமந்தையில் வைத்து பரிசோதனை எனும் பெயரில் அவமானப்படுத்தப்பட்டும், இவர்கள் பயணித்த வாகனத்தில் போதைப்பொருள் காணப்பட்டது என்று கூறி பல மணித்தியாலங்கள் அநாவசியமாக காக்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதன்பின்பு பல அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் கொழும்பு சென்று சேர்ந்த பின்பும் இவர்களை பயங்கரவாதிகள் என்றும், இவர்களை இப்பிரதேசத்தில் உள்நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி சிலர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்கள். இப்படியான ஒரு சம்பவம் ஒரு சிலமாதங்களுக்கு முன்பும் இடம்பெற்றமையையும் இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

ஓமந்தையில் வைத்து போதைப்பொருள் இருப்பதாகக்கூறி மறித்து அவமானப்படுத்தியவர்கள், கொழும்பில் வைத்து பயங்கரவாதிகள் என ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் ஆகிய இரண்டு காரியங்களையும் ஒரே தரப்பினரே ஏன் செய்திருக்க முடியாது?

அரசாங்கம் புரியும் சகல தவறுகளையும் ஆதாரத்துடன் எமது மக்களுக்கு வெளிப்படுத்தி ஊடகப்பணியாற்றி வரும் ஊடவியலாளர்களுக்கு எதிராக இடம்பெற்றிருக்ககூடிய இச்சம்பவம், அவ் ஊடகவியலாளர்களை முன்னரிலும் வேகமாக அவர்களை செயற்படத்தூண்டும்.

தமிழ்ச் சினிமாப் படப் பாணியில் நடந்திருக்கக்கூடிய இச்சம்பவம் இலங்கையில் தமிழ் ஊடகத்துறையினருக்கு எவ்வாறான அச்சுறுத்தல் நிலவுகின்றது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களின் பணியினை முடக்க முயற்சித்துவரும் அரசாங்கம் இதற்கான விளைவுகளை மிகவிரவிலேயே அனுபவிக்கும் என நம்புகிறேன்.

இச்சம்பவத்துக்கு எதிராக பாரியளவிலான போராட்டங்களை வடக்கு கிழக்கு எங்கிலும் முன்னெடுத்து இன்றைய நாட்டின் உண்மை நிலைய வெளிப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன், காரைநகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆனைமுகன் மற்றும் இளைஞர் சம்மேளன நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

SHARE