புதிய அரசியல் சாசனம் தொடர்பில் வெளிநாடு வாழ் இலங்கையர்களிடம் கருத்து கோரப்படும் என புதிய அரசியல் சாசனம் தொடர்பிலான மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.
வீடியோ கான்பிரன்ஸ் முறையில் வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இலங்கையர்களிடம் கருத்து அறியப்பட உள்ளது.
இவ்வாறு கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் கம்பாஹா, கண்டி, மாத்தளை, களுத்துறை, வவுனியா, காலி, கிளிநொச்சி, கேகாலை, மாத்தறை, மன்னார், ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் மக்கள் கருத்து அறியப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் குருணாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் மக்களின் கருத்து அறிந்து கொள்ளும் அமர்வு நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஏனைய மாவட்டங்களிலும் அமர்வுகளை நடாத்தி புதிய அரசியல் அமைப்பு பற்றிய மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத் தலைவர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி லால் விஜயநாயக்க கொழும்பு பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.