ரியூசன் கட்டண அதிகரிப்பை பிற்போடுமாறு ஆசிரியர் சமூகத்தை வேண்டுகின்றேன் : தேசிய முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் எம்.ஐ.எம்.வலீத்

322

 

நூருல் ஹுதா உமர்
பால்மா, எரிபொருட்கள், கோதுமைமாப் பண்டங்களுக்கு நிகராக ரியூசன் (பாட) கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றது. இவ்வதிகரிப்பினால் பல ஏழைப்பெற்றோர்கள் மனம் வெதும்புகின்றார்கள். 03 இற்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள வீட்டின் நிலைமை மிகவும் வேதனைக்குரியதாகவுள்ளது. பிள்ளைகளிற்கான காலை உணவு, பாடக்கட்டணம், போக்குவரத்துக் கொடுப்பனவு, கைச்செலவுக்கான தொகை என்பவற்றிற்காக அதிகமான பெற்றோர்கள் கடுமையாக திண்டாடுகின்றார்கள். மனம் நொந்து வேதனைப்படுகின்றார்கள். எனவே தயவு செய்து ரியூசன் கட்டண அதிகரிப்பை சில காலங்களிற்கு பிற்போடுமாறு ஆசிரியர் சமூகத்தை அன்பாக வேண்டுகின்றேன் என தேசிய முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் எம்.ஐ.எம்.வலீத் அறிக்கையொன்றினூடாக கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும், பல ஆசிரியர்கள் அக்கறையுடனும் இலவசமாகவும் இன்றும் சேவை நோக்குடன் கற்பித்தல் பணிகளில் பாடசாலைகளிலும், பிரத்தியேகமாகவும் ஈடுபடுகின்றார்கள். அவ்வாறானவர்களிற்கு விசேட நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன். ஒரு சமூகத்தினது உயர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் காத்திரமான பங்களிப்பைச்செய்து வரும் அன்பான ஆசிரிய ஆசிரியைகள் தங்களிடம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கல்வி அறிவூட்டுவது மட்டுமல்லாமல் வாழ்க்கையின் தத்துவத்தையும், உண்மை, நேர்மை, விட்டுக்கொடுப்பு, பிறருக்கு மாரியாதைசெய்தல் போன்ற வாழ்வியல் ஒழுக்கங்களை போதிப்பதிலும், வழிகாட்டுவதிலும் பெற்றோர்களை விடவும் ஆசிரியர் சமூகத்தின் வகிபாகம் என்றும் மதிக்கப்பட வேண்டியதும் நினைவு கூறப்படவேண்டியதுமாகும்.
ஆனாலும் நமது நாட்டில் அண்மைய வருடங்களாக கொரோனா மற்றும் பொருளாதார பின்னடைவு என்பவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் கணிசமானோர் ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள் என்று நம்புகின்றேன். இருந்த போதிலும் இவ்வாறான நாட்டின் இக்கட்டான சூழ்நிலையிலும் கூட ஆசிரிய சமூகம் தங்களது போராட்டங்களினூடாக நீண்ட காலமாக வெல்லப்படாமலிருந்த தங்களது சம்பள அதிகரிப்பு போன்ற கோரிக்கைகளை வென்ற அரச உத்தியோக வகுதியினராக தங்களைக் கொள்ளலாம்.
ஆனாலும், ஆசிரியர்களுக்கு நடைமுறை ரீதியாக பல்வேறு விடுமுறைகளும் (O/L , A/L பரீட்சைகள், தவணை லீவுகள், நோன்பு மற்றும் பல நீண்ட லீவுகளிற்கு உரித்தானவர்கள் ஆசிரியர் சமூகத்தினரே) சலுகைகளும் வழங்கப்படுவதோடு கொரோணா தாக்கத்தினால் பாடசாலை நடைபெற்ற நாட்களை விட நடைபெறாத நாட்களே மிக அதிகமாகும்.
ஆனாலும் எவ்வாறான சூழ் நிலைகளின்போதும் ரீயூசன் வகுப்புகளிற்கு எந்தத் தடையும் ஏற்பட்டதாக தெரியவில்லை (வங்கிகளில் பணம் வைப்புச்செய்யப்பட்டு Zoom தொழில்நுட்பம் மூலம் வகுப்புகள் நடாத்தப்பட்டன.) தற்போதும் கூட பாடசாலைகளில் முடிக்கக்கூடியதான பாட அலகுககள் பல வேண்டுமென்றே ஆசிரியர்களினால் அலைக்களிக்கப்பட்டு ரியூசன் வகுப்புக்கு வருமாறு மறைமுகமாக கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். (பாடசாலையில் ஒரு பாட வேளையான 40 நிமிடத்தில், 20 நிமிடங்களே கற்பித்தல் நடைபெறுகின்றது. பாடசாலைகளில் முடிக்கப்படக்கூடிய பாடவிதானங்கள் பல, ரியூசனை நோக்காகக்கொண்டு இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது. என்று தெரிவித்துள்ளார்.

SHARE