வன்முறைச் சிந்தனையை கொண்ட சிங்கள மேட்டிமை வாதிகளிடம் சனநாயகத்தை எதிர்பார்க்க முடியுமா? சாதுக்கள் தொடக்கம் சட்டத்தை பாதுகாப்பவர் வரை எல்லோரும் ஒரே மனநிலையுடையவர்கள் தான் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் இங்கு மேலும் குறிப்பிடுகையில்,
மீண்டும் அரியனை ஏறுகிறது, அரச பயங்கரவாதம். தமிழரைக் கொல்வதில் சிங்களவர்களுக்கு எப்போதும் அலாதிபிரியம் உண்டு.
பல்கலைக்கழக மாணவர்களை நள்ளிரவில் நடு விதியில் வைத்து கொலை வெறிதாக்குதல் நடாத்துவதற்கு அவர்கள் என்ன பயங்கரவாதிகளா?
தமிழர் தாயகப்பகுதியில் ஆயுததாரிகளின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்குரிய நல்லாட்சி அரசின் நாடகமா?
உண்மையான குற்றவாளிகளை கட்டுப்படுத்த தவறும் காவல்துறை அப்பாவிகளை பலியெடுப்பதுதான் சட்ட பாதுகாவலர்களின் பணியா?
யுத்தம் எனும் நெருப்பாற்றில் பல ஆயிரம் உறவுகளை இழந்து ஊசலாடும் எம்மை மேலும், மேலும் படு கொலைக்குள்ளாக்கின்றீர்களே இது தானா பௌத்த தர்மம்.
ஆகவே இந்த மாணவர்களின் திட்டமிட்ட இனப்படுகொலையை கண்டிப்பதுடன், படுகொலைக்குரிய உண்மையான காரணம் கண்டறியப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நீதி பாதியாகி நீழுறக்கம் கொள்ளும் வாடிக்கை இதில் மாறுபட்டு நியதியோடு நீதி கிடைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதுடன், கதவடைப்பு போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவை தெரிவித்துக் கொள்வதுடன் அனைவரும் இவ் கதவடைப்பு போரட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.