முல்லைத்தீவோ, முழங்காவில்லோ, நெடுங்கேணியோ, நெடுந்தீவோ, மன்னாரோ அனைத்துப்பகுதிகளையும் சரி சமமாகவே நான் பார்க்கின்றேன் – சுப்பர்மட அரைக்கும் ஆலை திறப்புவிழாவில் அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்…
வடக்கு மாகாண சபையின் வருடாந்த பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி நன்கொடையின் கீழ், கிராம அபிவிருத்தி திணைக்களத்தால், வடக்கு மாகாணத்தின் கிராமங்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் பரித்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, சுப்பர்மடம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட அரைக்கும் ஆலை உத்தியோக பூர்வமாக திறந்து சங்கத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 12-02-2016 வெள்ளிக்கிழமை பிற்ப்பகல் 3 மணியளவில் நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்களும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு திறந்து வைத்தனர், நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினர் சி.சுகிர்தன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும், உள்ளூராட்சி அமைச்சின் செயலளார் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்களும், கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் ஆகியோரும் விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வினை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் திரு.ஆர்.டி.ஜெயசீலன் அவர்கள் தலைமைதாங்கினார்.
நிகழ்வில் அமைச்சர் தனது உரையில், வினைத்திறன் மிக்க சங்கங்களை கொண்டே ஒரு கிராமத்தை வாழ்வாதாரத்தில் கட்டிஎளுப்பமுடியும் எனவே தான் நான் எனது ஒதுக்கீடுகளை ஐந்து மாவட்டங்களுக்கும் சரியான தேவையின் அடிப்படையில் வழங்கிவருகின்றேன் அந்த வகையில் முல்லைத்தீவோ, முழங்காவில்லோ, நெடுங்கேணியோ, நெடுந்தீவோ, மன்னாரோ அனைத்து மக்களும் எனது மக்களே அவர்களை தேவைகளின் அடிப்படையில் வினைத்திறன் மிக்க ஓர் மாகாணமாக எதிர்காலத்தில் கட்டிஎளுப்புவதே எனது பிரதான நோக்கம் என்றும் எல்லா கிராமங்களுக்கும் பல்வேறுபட்ட தேவைகள் இருக்கின்றது ஆனாலும் அனைத்து மக்களும் ஒற்றுமையோடும் ஒரு சில விட்டுக்கொடுப்புக்களோடும் செயற்ப்பட்டால் நாம் விரைவில் வளர்ச்சி அடைய முடியும் என்றும், கிடைத்துள்ள வளங்களை சரியான முறையிலே அனைத்து சங்கங்களும் பயன்படுத்தவேண்டும் என்றும் இந்த அரைக்கும் ஆலை மூலமாக சுப்பர்மடம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மாதம் 25,000-00 ரூபா இலாபம் அடைவீர்கள் என்றால் நீங்கள் கேட்காமலே மேலும் அபிவிருத்திகளை நானே கொண்டுவருவேன் என்றும் வாக்குறுதி வழங்கினார்.