நாட்டின் தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் மிக்கது என்பதை உணர்ந்துள்ளதாலேயே கோத்தபாய ராஜபக்ஷவின் தெரிவு சரியானது என்பதை முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார்.
சரத் பொன்சேகா விரைவில் எம்முடன் இணைந்து செயற்படுவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூட்ட எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலியரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நாடுமுழுவதும் பாரிய வரவேற்பு காணப்படுகின்றது. நாம் தேர்தலுக்கு சிறந்த முறையில் தயாராகிவருகின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமை சரியானது என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே கெஹெலியரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நாடளாவியரீதியில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றது. நாம் பல்வேறு இடங்களுக்கு எமது வேட்பாளரை அழைத்து செல்கிறோம். மக்கள் பாரிய அளவில் வரவேற்பு வழங்குகின்றனர். தற்போது கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டமை சரியான முடிவு என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் பாதுகாப்பு தொடர்பில் ஒரு நிபுணராக காணப்படுகின்றார். அவர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலேயே கோத்தாவின் தெரிவை சரியானது என்று கூறுகிறார். சரத் பொன்சேகா விரைவில் எம்முடன் இணைந்து செயற்படுவார் என்று நம்புகின்றோம் என்றார்.