அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு-கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தால் மகத்தான வெற்றி

253
வடக்கு கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தாலை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:
சாகும்வரை உண்ணாவிரதம் இருந்துவரும் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களது விடுதலையை வலியுறுத்தியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் – பொது அமைப்புகளும் விடுத்த வேண்டுகோளை ஏற்று வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் எமது நன்றிகள்.
கடந்த 08.11.2015 அன்று எமது கட்சியின் வவுனியா அலுவலகத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களும், வர்த்தக சங்கத்தினரும், சிவில் சமூக அமைப்பினரும் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய வவுனியா மாவட்டத்தில் 13.11.2015 அன்று முழு அளவிலான ஹர்த்தாலை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக 13.11.2015 அன்று வடக்கு கிழக்கு முழுவதும் பூரண ஹர்த்தால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹர்த்தாலை வெற்றியடையச் செய்வதில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட அனைத்து வர்த்தகர்களுக்கும், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், அரச தனியார்துறை ஊழியர்களுக்கும், அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும், ஊடகத்துறை அன்பர்களுக்கும், சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட ஏனைய பொது அமைப்புகளுக்கும், அனைத்து பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது மக்கள் தமது உறவுகளின் முழுமையான விடுதலையை மட்டுமே தாங்கள் விரும்புகின்றனர் என்ற தெளிவான செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் குறித்த பூரண ஹர்த்தாலின் மூலம் தெளிவாக சொல்லியுள்ளனர்.
தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதுடன், எமது நீண்டகால இனப்பிரச்சினைக்கும் விரைவாக தீர்வைக் காண்பதற்கும் இலங்கை அரசு முன்வரவேண்டும் என்றும் ஆனந்தன் எம்.பி தெரிவித்துள்ளார்
SHARE