அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவோம் : அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

191

அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவோம் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா அழைப்பு விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது அரசியல் பேதமின்றி சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து மேற்கொள்ளப்படவேண்டும்.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் இன்றைய நாளில் அந்த மக்களின் ஆத்மா சாந்திக்காக நாம் பிரார்த்திக்க வேண்டும்.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்காலில் நினைவு தூபியினை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன்.

இறுதி யுத்தத்தின்போது வன்னியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். உயிரிழந்த இந்த மக்கள் நினைவுகூர முடியாத நிலைமை பல வருடங்களாக நிலவி வந்தது.

ஆனாலும் எமது நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து 2015 ஆம் ஆண்டு மே மாதம் முதல் முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளுக்கு நினைவேந்தல் செய்யக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டது.

கடந்த மூன்று வருடங்களாக முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுகின்றது. இதேபோன்றே கடந்த வருடம் மாவீரர் தின நிகழ்வுகளும் வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டது.

இவ்வாறு எமது அரசாங்கமானது நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதியினை வழங்கியுள்ளது. நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதில் தவறேதும் இல்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றார்.

யுத்தத்தில் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது அரசியல் சுயநல பேதங்கள் இன்றி பொதுவான எண்ணத்துடன் நடத்தப்படவேண்டியது இன்றியமையாததாகும்.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் இன்றைய நாளில் அரசியல் பேதங்கள் இன்றி சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியமானதாகும்.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு முள்ளிவாய்க்காலில் நினைவுதூபி அமைக்கப்படவேண்டியதன் அவசியத்தை கடந்த மூன்று வருடங்களாக வலியுறுத்தி வருகின்றேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த புதன்கிழமை சந்தித்து நினைவுதூபி அமைக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கான கடிதத்தினையும் கையளித்துள்ளேன்.

அதேபோன்றே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இரணைதீவில் மக்களை குடியேற்றவேண்டியதன் அவசியத்தை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தேன்.

அதற்கான சந்தர்ப்பம் தற்போது எட்டியுள்ளது. அதேபோன்றே நினைவு தூபி அமைக்கும் விடயத்திலும் தொடர்ச்சியாக அக்கறை செலுத்துவேன்.

இன்றைய துக்கரமான நாளில் சகலரும் ஒன்றிணைந்து உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவோம். அரசியல் பேதங்களை மறந்து நாம் அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது இன்றியமையாதது.

 

SHARE