அஸ்வினைப் போல ரன்அவுட்! கோபத்தில் நடுவிரலை காட்டிய தமிழக வீரர்

128

 

டிஎன்பிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில், தமிழக வீரர் ஜெகதீசன் மான்கட் முறையில் ஆட்டமிழந்ததால் நடுவிரலை காட்டி கோபத்தை வெளிப்படுத்தினார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 6வது சீசன் நேற்று தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் நெல்லை-சேப்பாக் அணிகள் மோதின.

முதலில் ஆடிய நெல்லை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய சேப்பாக் அணியில் நாராயணன் ஜெகதீசன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது 4வது ஓவரை வீசிய பாபா அப்ரஜித், எல்லைக் கோட்டை விட்டு நகர்ந்த ஜெகதீசனுக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டு பந்துவீசினார். அதன் பின்னர் அடுத்த பந்தை வீசும்போதும் ஜெகதீசன் அதே தவறை செய்யவே, அப்ரஜித் அவரை மான்கட் முறையில் அவுட் செய்தார்.

இதனால் கோபமடைந்த ஜெகதீசன் பெவிலியன் செல்லும் போது நடுவிரலை காட்டி மோசமாக நடந்துகொண்டார். தமிழக வீரர் அஸ்வின் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் என இரண்டு முறை மான்கட் முறையில் எதிரணி வீரரை ஆட்டமிழக்க செய்தது பரபரப்பானது.

இந்த நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டிலும் அஸ்வின் ஸ்டைலில் வீரர் ஒருவர் ஆட்டமிழந்திருக்கிறார். துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்த முறையில் ஆட்டமிழப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்தாலும், ஐசிசி-யின் விதிமுறைகளில் இதுவும் ஒன்று என்பதால், கிரிக்கெட் விமர்சகர்கள் இதனை தவறு இல்லை என்கின்றனர்.

SHARE