ஆயுதக்கட்சிகளைச் சின்னாபின்னமாக்கும் தமிழரசுக்கட்சியின் சதித்திட்டம் அம்பலம் – இந்தியாவுடன் இரகசியப் பேச்சு

242

அண்மைக்காலமாக வட-கிழக்கில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் பூதாகரமாக இடம்பெற்று வருகின்றது. இதற்கிடையில் வட-கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நெருங்கியுள்ள தருணத்தில் ஆயுதக்கட்சிகளை எவ்வாறு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவது என்பதுபற்றிய கலந்துரையாடல்களை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியாவின் ரோவின் ஆலோசனையுடன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மிக முக்கியமாக சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவான் போன்றோர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழின விடுதலைக்காக ஒரே கோட்டில் பயணித்த இவ்வாயுதக்கட்சிகளின் செயற்பாடுகளை சிதைவடையச் செய்யும் நோக்கில் செயற்படும் தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆயதக்கட்சிகள் இனியாவது விழித்துக்கொள்ளவேண்டும்.

மக்கள் மத்தியில் ஜனநாயக நீரோட்டத்தில் பிரகாசித்துவரும் இவ்வாயுதக்கட்சிகளை ஓரங்கட்டுவதன் ஊடாக, தமிழரசுக்கட்சி தனது கட்சியைப் பலப்படுத்திக்கொள்வதாக நினைத்துக்கொள்கிறது. நீண்டதூர இலக்கோடு இவ்வாறான திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. ஆயதக்கட்சிகளின் அண்மைக்காலச் செயற்பாடுகள் உலகநாடுகளுக்கும், அரசுக்கும் அச்சுறுத்தலாக அமைவதனால் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் உருவாகிவிடுமோ என்கிற அச்சமும் நிலவிவருகின்றது.

ஒரு காலத்தில் இலங்கை அரசுக்கு எதிராக ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி போன்ற கட்சிகள் இந்திய அரசினால் கையாளப்பட்டனர். பின்னர் ஈ.பி.டி.பி இலங்கை அரசுக்கு முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தது. இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்கிய ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற கட்சிகள் விடுதலைப்புலிகளின் தலையீட்டினால் தமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டு, தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து பயணித்துவரும் இந்நேரத்தில், தமிழரசுக்கட்சியினது அரசியலுக்கும், எதிர்க்கட்சிக்கும் குழுதோண்டிப்புதைக்கும் செயற்பாடுகளில் இவ்வாயுதக்கட்சிகள் களமிறங்கியிருப்பதுடன், அதனுடன் இணைந்து ஒருசில ஊடகங்களும் செயற்படுகின்ற காரணத்தால் முற்றுமுழுதாக ஆயதக்கட்சிகளை தமிழரசுக்கட்சிக்குள் உள்வாங்கவேண்டும் அல்லது அவர்களை தேர்தல்களில் இருந்து புறக்கணிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டையே தமிழரசுக்கட்சி இரகசியமாக மேற்கொண்டு வருகின்றது.

ஏற்கனவே வேறுவேறு கட்சிகளில் இருந்த முன்னாள் வடக்கு விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சிவமோகன் என இன்னும் பலர் தமிழரசுக்கட்சியினால் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஐங்கரநேசன், சிறிதரன், சிவமோகன் இம்மூவரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் ஊடாகவே பாராளுமன்றிற்குத் தெரிவுசெய்யப்பட்டவர்கள். இவர்களை எவ்வாறு தமிழரசுக்கட்சி உள்வாங்கிக்கொண்டதோ அதேபோன்று தற்போது வட மாகாண சபையில் அமைச்சராகவிருக்கக்கூடிய டெனீஸ்வரனையும் உள்வாங்கக்கூடிய அனைத்துத் திட்டங்களையும் தமிழரசுக்கட்சி வழிவகுத்துள்ளது.

அதனொரு கட்டமாக டெனீஸ்வரனை அமைச்சுப்பதவியிலிருந்து ரெலோவின் சிறிகாந்தாவின் மூலம் விலகுமாறு கோரி முதல்வருக்கு எழுதிய கடிதம் சிறந்த உதாரணமாகும். டெனீஸ்வரன் நீக்கப்பட்டால் அவர் வேறு வழியின்றி தமிழரசுக்கட்சியுடன் இணைந்துகொள்ளவேண்டிய நிலையும் உருவாகலாம். இதனால் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தனது பாராளுமன்றக் கதிரையை இழக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். பாராளுமன்றத் தேர்தலில் மன்னார் வாக்குகளை நம்பியே அடைக்கலநாதன் அவர்கள் களமிறங்கி வெற்றிபெறுவது வழக்கம். இதில் ஏதாவது குழப்பகரமான நிலை ஏற்படும் போது தமிழரசுக்கட்சியின் சார்பில் பா.டெனீஸ்வரன் அவர்கள் களமிறக்கப்படுவார். இதனால் இலகுவாக வெற்றியைப்பெற்றுக்கொள்ளும் நிலை அவருக்கு உருவாகும்.

அந்த நிலைமையை உருவாக்கி அதேபோன்று பலரை தம்வசப்படுத்தும் செயற்பாட்டையே தமிழரசுகட்சி தற்போது செய்துவருகின்றது. ரெலோவின் செயலாளர் நாயகம் என்பவர் கடந்த காலங்களில் அரசின் உளவாளியாக செயற்பட்டவர். இவர் சிறந்த சட்டத்தரணியாகவிருந்தாலும் செய்றபாடுகள் அனைத்தும் கட்சியின் விசுவாசமாகவே செயற்படுபவர். தமிழரசுக்சட்சி விரித்த வலையில் இந்த ஆயதக்கட்சிகள் சிக்கிக்கொண்டன என்பதுதான் உண்மை. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு 03 ஆசனங்களை வழங்குவதற்கு தமிழரசுக்கட்சி உத்தேசித்து வருகின்றது. அவ்வாறான நிலை தோற்றுவிக்கப்படுமாகவிருந்தால் நிச்சயமாக அவர்கள் வெற்றிபெறுவார்கள்.
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற கட்சிகளின் பாராளுமன்றக் கனவு சிதைக்கப்படும். குறிப்பாக சிறிதரன், சரவணபவான் போன்றோரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஆப்பு அடிக்கப்படலாம். எது எவ்வாறாகவிருப்பினும் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சின்னாபின்னமாகப் பிளவுபடுவதை ஏற்கமுடியாது. அங்கத்துவக் கட்சிகளுக்குள் தற்போது முறுகல் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. டெனீஸ்வரன் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறினார் எனக் கூறப்படும் ரெலோவின் கோரிக்கை நியாயமானது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ள தமிழரசுக்கட்சி தற்போது தீவிர செயற்பாட்டில் களமிறங்கியுள்ளது. ஏற்கனவே ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சார்ந்தவர்கள் தமிழரசுக்கட்சியில் இணைந்துள்ளமையானது அவர்கள் அக்கட்சிக்கு பாரிய துரோகத்தையே இழைத்துள்ளனர். ஒரு கட்சியினால் ஆசனம் வழங்கப்படுவது சாதாரணவிடயமல்ல. அதற்கு அக்கட்சி எவ்வளவோ சிரமங்களை எதிர்கொண்டிருக்கும். இவற்றைத் தாண்டியே வெற்றிபெற்று பாராளுமன்ற கதிரையினைக் கைப்பற்றிய பின்னர் குறித்த நபர்கள் வேறு கட்சிக்குத் தாவுவது என்பது அக்கட்சிக்குச் செய்யும் பாரிய துரோகம் எனலாம்.

இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் நிலைப்பாடு இலங்கையில் ஆயுதக்கட்சிகளின் செயற்பாடுகளைச் செயலிழக்கச்செய்வதே. ஜனநாயக நீரோட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைமையில் அரசுடன் ஒத்து வாசிப்பதற்குத் தயாரிப்படுத்துவதே. ஆயுதப்போராட்ததின் ஊடாக வந்த கட்சிகளுக்கு அதன் வலி எப்போதும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. வுடமாகாண சபையைப் பொறுத்தவரை ஆயுதக்கட்சிகள் ஒரு பக்கமும், தமிழரசுக்கட்சி மறுபக்கமும் நின்று செயற்பட்டதன் விளைவு இன்று பாரிய பின்னடைவைத் தோற்றுவித்துள்ளது.
முதல்வர் விக்னேஸ்வரனையும் அரங்கிலிருந்து அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் விரும்பியோ, விரும்பாமலோ பிரேமானந்தா அவர்களின் ஆச்சிரமத்திற்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுரேஸ் மற்றும் கஜேந்திரகுமார் போன்றோர் ஒரு குடையின் கீழ் போட்டியிடப்போவதில்லை. தமிழ் மக்கள் பேரவையானது ஆயதக்கட்சிகளை இணைத்து முதல்வரின் தலைமையில் செயற்படுமாகவிருந்தால் அதுவே இவர்களின் தோல்விக்குப் பிரதானமான காரணமாக அமையும்.

தற்போது அரசியல் சாணக்கியம் கொண்டவர்களாக, தமிழரசுக்கட்சி தனது புலனாய்வு நடவடிக்கைகளை தீவிரமாக ஆயதக்கட்சிகளுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்றது. பிறிதொரு கட்சியில் இருப்பவர்களை இரகசியமான முறையில் உள்வாங்குவதன் ஊடாக பாரிய வெற்றிகளைப் பெற முடியும் என்பது வரலாறு. தமிழரசுக்கட்சியை ஏனைய ஆயுதக்கட்சிகள் உள்வாங்கிக்கொண்டால் பலமாக அமையாது பலவீனமாகவே அமையும். தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக அரசியலை நகர்த்தமுடியும் என்பது ஒரு சில ஊடகங்களின் எதிர்பார்ப்பு.

மலையகத்தில் தனது செல்வாக்கை நிலைநாட்டியது போன்று வடக்கில் தனது செல்வாக்கை நிலைநாட்டலாம் என்ற நோக்கில் குறித்த ஒரு ஊடகவியலாளர் செயற்பட்டார். இறுதியில் அவரது நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. தமிழ் மக்களது அரசியலைப்பொறுத்தவரை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒற்றுமையுடனேயே பயணிக்கவேண்டும் என்பது தலைவர் பிரபாகரனின் முடிவு. அதனை மாற்றியமைத்து பிறிதொரு வடிவத்தினைக் கொண்டுவரும்போது அரசியலில் பாரிய பிரச்சினைகள் ஏற்படும். யுத்த காலத்தில் அரசியல் செய்தவர்கள் இன்று சுயநல அரசியல் செய்கின்றனர். அரசியல்வாதிகளுக்கு இன்று அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஜனநாயக வழயில் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளை வென்றெடுக்கும் வழிகளை மேற்கொள்ளவேண்டும். அதனைவிடுத்து கட்சிகளுக்குள் குழப்பங்களை உருவாக்கி தமிழ்த்தேசியத்தை சிதைவடையச்செய்யும் நோக்கில் தற்போதைய அரசாங்கம் தமிழரசுக்கட்சியைப் பயன்படுத்தி வருகின்றது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பதிவுசெய்யும் நோக்கோடு இவ்வாயுதக்கட்சிகள் எதிர்வரும் தேர்தல்களில் களமிறங்கக்கூடும். அதுவும் இவர்களை ஆபத்தான நிலைக்கு இட்டுச்செல்லும். அவ்வாறானதொரு தூண்டுதல் செயற்பாட்டையே தற்போது இக்கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இறுதியில் ‘சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி’ என்கிற நிலையே இக்கட்சிகளுக்கு உருவாகும். இத்தகைய செயற்பாடுகளில் இருந்து தவிர்த்துக்கொள்வதற்கு ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற கட்சிகள் தமது அங்கத்தவர்களை இழக்கும் அளவிற்கு தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடாது. தற்பொழுது வாய்வீரம் பேசும் இந்த ஆயுதக்கட்சிகள் தேர்தல் காலம் வருகின்றபோது சம்பந்தன், சுமந்திரன், மாவையினது காலைப்பிடிக்கிறார்கள். தமிழரசுக்கட்சிக்குள் பிளவுகள் இருந்தாலும் இல்லை என அக்காலத்தில் ஊடகங்களுக்குப் பொய் சொல்கிறார்கள். தன்மானமுள்ள ஆயுதக்கட்சிகளாகவிருந்தால் தமிழரசுக்கட்சியை ஓரங்கட்டி தனித்துநின்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் செயற்பாடுகளில் களமிறங்கவேண்டும்.
எனினும் இக்கட்சிகளில் இருந்து தமிழரசுக்கட்சிக்குப் பலர் உள்வாங்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகளால் இந்த நான்கு கட்சிகளையும் ஒன்றிணைக்கமுடியுமாகவிருந்தால் உங்களில் ஒரு ஆயுதக்கட்சி முன்னின்று இதனை ஏன் செயற்படுத்த முடியாது. அரசாங்கம் தமிழ்த் தரப்புக்களை வைத்தே பிரச்சினைகளை முடிவுக்குக்கொண்டுவந்தது. தற்போதும் தமிழர்த்தரப்பினை வைத்தே ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற நிலைப்பாட்டைக்கொண்டு வர இருக்கிறது.
ஒற்றையாட்சியினை எதிர்க்கும் அனைவரையும் அரங்கிலிருந்து அகற்றிவிடுவதே அரசின் நோக்கம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார். அதற்கு தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயற்படுவது தடையாகக்காணப்படும். அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தனித்து விடப்படும். புளொட், ரெலோ தமிழரசுக்கட்சியை வழமைபோலவே ஆதரிக்கும். இதனால் இவர்களது வாக்குவங்கி சரியப்படும். இலகுவான முறையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக்கட்சி வெற்றியை தனதாக்கிக்கொள்ளும். ஆகவே கட்சிக்குள் இருக்கக்கூடிய பிணக்குகளை உள்ளுக்குள்ளேயே தீர்த்துக்கொள்வதைவிடுத்து, பெரிதுபடுத்தி தண்டனையை வழங்குவதென்பது குறித்த கட்சிகளுக்குப் பலவீனத்தையே ஏற்படுத்தும். தமிழரசுக்கட்சியினது செயற்பாடுகள் குறித்து இக்கட்சிகள் எச்சரிக்கையாக தமது நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது.

இரணியன்

 

SHARE