இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிக்கப்படுமா?

110

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இன்று விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இதில் எட்டப்படும் தீர்மானம் குறித்து சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தப் பதவியைப் பெற்றுத் தருமாறு எந்தவொரு தரப்பினரும், தம்மிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு வழங்க வேண்டுமென்று சில உறுப்பினர்கள் சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த பெருமளவு உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து சபாநாயகர் கடிதம் மூலம் விளக்கம் கோரியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின் படி எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு கூட்டு எதிரணிக்கு எந்த வாய்ப்பும் இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சமகால அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அவரின் பதவியை பறித்தெடுக்க மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியினர் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE