இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கை விடயங்கள் தொடர்பிலான தனது ஆர்வத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
லண்டன் நகரில் இடம்பெற்ற உலக தமிழர் பேரவை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சொல்ஹெய்ம் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது, புலம்பெயர் தமிழ் அமைப்புளுடன் செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பில் தமது அனுபவங்களை எரிக் சொல்ஹெய்ம் பகர்ந்துகொண்டார்.
மேலும், கடந்த 2002 தொடக்கம் 2004ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கிடையில் சமாதான செயற்பாடுகளை, சொல்ஹெய்ம் முன்னெடுத்திருந்தார்.
இதேவேளை, இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பிலான தமது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அவ்வப்போது எரிக் சொல்ஹெய்ம் வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.