ஐந்தறிவு ஜீவனின் விசுவாசம்… எஜமானியின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரை துறந்த பரிதாபம்

245

எஜமானியை கொத்த முயன்ற பாம்பை கடித்துக் கொன்ற நாய் பாம்பு தீண்டியதால் பரிதாபமாக இறந்தது. நாயின் இந்த விசுவாசம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நன்றி உள்ள மிருகத்துக்கு எடுத்துக்காட்டாக நாயை சொல்வர்.

இதை மெய்ப்பிக்கும் விதமாக நடந்த நெகிழ்ச்சி தரும் சம்பவம் இந்தியாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே செந்தியம்பலம் கதர் காலனியை சேர்ந்தவர் பட்டுராஜன்.

இவரது மனைவி சாந்தி. இவர் முள்ளன்விளையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படிக்கின்றனர். இவர்களது வீட்டில் பொமரேனியன் நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். வெள்ளை நிறமும், அடர்த்தியான முடியுமாக இருந்த அதற்கு பப்பி என பெயரிட்டு மிகவும் செல்லமாக அழைத்தனர்.

பப்பி தனது எஜமானிக்கு மட்டுமின்றி அக்கம்பக்கத்தினர் வீடுகளிலும் செல்லமாக இருந்து வந்தது. நேற்று மாலை வீட்டில் சாந்தி மட்டும் தனியாக இருந்தார். அப்போது திடீரென பப்பி தொடர்ந்து குரைத்த வண்ணம் இருந்தது. இதற்கான காரணத்தை அறிவதற்காக வீட்டின் பின்புறம் பப்பி இருந்த பகுதிக்கு சாந்தி சென்றார்.

அப்போது அங்கு கொடிய விஷம் கொண்ட நல்லபாம்பு ஒன்று படமெடுத்து ஆடியவாறு நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி சுதாரித்து விலக முயன்ற போது பாம்பு சீறியது. ஆக்ரோஷத்துடன் அருகே வந்து அவரை தீண்ட முயன்றது. இதை பார்த்த பப்பி தனது எஜமானியை தீண்ட முயன்ற பாம்பின் மீது பாய்ந்தது. அப்போது பாம்பு பப்பியை இறுக்கமாக சுற்றியது.

இருப்பினும் பப்பி விடாமல் அதன் தலைப்பகுதியை கடித்து குதறியது. ஆத்திரமடைந்த பாம்பு பப்பியை தீண்டி விட்டு வீட்டிற்குள் நுழைய முயன்றது. ஆனால், உடல் முழுவதும் விஷம் ஏறிய நிலையில் பப்பி சளைக்காமல் பாம்புடன் போராடி அதை கடித்துக் கொன்றது. பின்னர் அந்த பப்பியும் மயங்கியது. இதையடுத்து சாந்தி மற்றும் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பப்பியை தூக்கிச் சென்று முதலுதவி அளிக்க முயன்றனர்.

ஆனால், விஷத்தின் வீரியத்தில் உயிருக்கு போராடிய பப்பி சிறிது நேரத்தில் இறந்தது. தன்னை குழந்தை போல வளர்த்த எஜமானியின் உயிரை காக்க தன்னுயிரை கொடுத்த பப்பியின் தியாகத்தை பார்த்து சாந்தியின் குடும்பத்தினர் மட்டுமின்றி அப்பகுதி மக்கள் அனைவரும் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டனர்

 

SHARE