கடந்த 4.7.2014 அன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த அல்ஜெசீரா வின் அமெரிக்க பகுதிக்கு பொறுப்பான தயாரிப்பாளர்களில் ஒருவரான மார்க்கெல் ஃகொப்கின்ஸ் ( Marcelle Hopkins ) அவர்கள்

637
Wed,Apr 9, 2014. By Admin

 

 

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை சந்தித்து தமிழர் தேசத்தின் தற்போதைய நிலை குறித்து அவரிடம் வினவி அதற்கான கருத்துக்களை கேட்டுச்சென்றார்.

 

கலந்துரையாடல்கள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டதுடன் அவை இனிவரும் காலங்களில் அல்ஜசீரா தொலைக்காட்சி குழுமத்தினால் வெளியிடப்படும் எனவும் அறிய முடிகிறது.

 

காணிப்பிரச்சினை, பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான தகவல்களை பெறவந்த அல்ஜெசீரா தொலைக்காட்சி பணிப்பாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழர் தேசங்களில் பரவலாக நடைபெறும் அனைத்து அடக்குமுறைகள் தொடர்பாகவும் கேட்டு தகவல்களை பெறவேண்டிய நிலையை ரவிகரனின் ஒவ்வொரு பதில்களும் தோற்றுவித்திருந்தன.

வடமாகாணசபை உறுப்பினர் என்ற வகையில் எவ்வாறான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கிறீர்கள் என ஆரம்பத்த அவர்களது வினாக்கள் வடமாகாண சபை எதிர்நோக்கும் பிரச்சினைகள், யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட – மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வீட்டுத்திட்டம் தொடர்பிலான விடயங்கள், தமிழர் தேசங்களில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம் சிங்களவரின் அத்துமீறிய குடியேற்றங்களுடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தமிழினப்பரம்பல் சிதைப்பு மற்றும் சட்டங்களை மீறிய நிலையில் நிலைகொள்ளும் சிங்களவரின் நடவடிக்கைகள் என பல விடயங்களும் ஆதார பின்னணிகளுடன் ரவிகரனால் முன்வைக்கப்படக்கூடிய வகையில் வழங்கப்பட்ட பதில்களும் அதனைத்தொடர்ந்ததான கேள்விகளும் பின்னிப்பிணைந்திருந்தன.

 

பெரும்பான்மையாக தமிழ்மக்களே இருக்கின்ற இந்த மாகாணத்தில் மக்களின் எழுச்சிமிகு தேர்தல் பங்கெடுப்பின்மூலம் அமோக வெற்றியீட்டி தமிழர்களின் ஆட்சி வட மாகாணத்திலே அரங்கேறுகிறது.

 

வடமாகாண சபை ஆளுனராக ஒரு முன்னாள் இராணுவத்தளபதி. முதன் முதலாக வடக்கு மாகாணத்திற்குரிய மாகாணசபை இயங்கவிருக்கிற நிலையில் போர்ச்சூழலில் வன்மையான உணர்வுகளுடன் பின்னிப்பிணைந்திருந்த ஒருவர் இவ்வாறு நிர்வாக அலகிற்கு நியமிக்கப்படுவது முறையல்ல. மக்கள் பிரச்சினை மக்களின் உணர்வுகள் மக்களின் வாழ்வாதார எழுச்சி மக்களின் இறையாண்மை என்று மக்கள் தொடர்பிலான அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு மக்கள் சார்பிலான ஒருவர் நியமிக்கப்படுதலே பொருத்தமாகும். இவரை மாற்றுமாறு பல தடவை கோரியும் அது நிறைவேற்றப்படவில்லை.

 

ஒரு மாகாணசபையின் முதலமைச்சரால் அவரின் செயலாளரை கூட மாற்றவல்ல அதிகாரம் கூட இல்லாத நிலையே இங்கு காணப்படுகிறது.

 

மாகாணங்களுக்கென ஒதுக்கப்படும் நிதி என்று பார்க்கும் போது 200 இல் ஒரு பங்கு நிதியே வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் 95% நிர்வாக செலவுகளுடன் போக மீதமிருக்கும் சொற்பளவு நிதியே மக்கள் தொடர்பிலான செயற்திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிற நிலை.

 

வருமானம் வரக்கூடிய வழிகளை மாகாணசபையே தேடவேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் இங்கு இயங்குவது முதலாவது வடமாகாண சபை என்று ஏன் அவர்கள் உணரவில்லை. மேல்மாகாணத்தில் முதல் நியதிச்சட்டம் உருவாக 7 மாதம் கடந்திருக்கிறது.

 

நாம் 5 மாதத்திலேயே சில நியதிச்சட்டங்களை உருவாக்கியிருக்கிறோம். வருமானங்களை பெறக்கூடிய வழிகள் என்று அவற்றை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும் குறிப்பிட்ட காலம் அவசியப்படுகிறது அல்லவா?

 

இந்நிலையில் போடப்படும் பிரேரணைகளிலும் பெரும்பாலானவை நடைமுறைப்படுத்தப்படாது வெறும் செய்திகளுக்காகவே அவை பயன்படும் நிலை.

 

ஆளுநர் மாற்றம் முதலமைச்சரின் செயலாளர் மாற்றம் உள்ளிட்ட பெரும்பாலான கோரிக்கைகள் இலங்கை அரசால் மறுக்கப்பட்டே வருகிறது.

 

சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளை நினைவுகோர ஆங்காங்கே எழுப்பப்பட்ட நினைவாலயங்கள் போல யுத்தத்தில் பறிகொடுத்த உறவுகளை நினைவு கோர நினைவாலயம் ஒன்று அமைக்கவேண்டும். அதில் வந்து கண்ணீர் சொரிந்து மாலையிட்டு மக்களின் மனங்களில் தேங்கியிருக்கின்ற இழப்புகளின் வலிகள் அகல வேண்டும் என்ற நோக்கத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவாலயம் அமைக்கவேண்டும் என்ற பிரேரணை பாராளுமன்றம் வரை சென்று தடுக்கப்படுகிறது.

 

அபிவிருத்தி தொடர்பில் பல பிரேரணைகள் மாகாணசபையால் நிறைவேற்றப்பட்டும் அவை செயல் வடிவம் பெற முடியாத நிலை தான் இங்கு காணப்படுகிறது.

 

யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் வளம்பெற்றிருந்த கடல்தொழில் இன்று தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய கடல் பிரவேசத்தாலும் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளின் பயன்பாட்டாலும் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப்பாதிக்கப்பட்ட நிலை. வருடம் பூராவும் மீனவர் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் கொக்கிளாய் கடனீரேரியில் விசைப்படகுகள் பாவிக்கப்பட்டும் சட்டத்திற்கு முரணான வலை வகைகள் பாவிக்கப்பட்டும் மேற்கொள்ளப்படும் மீன்படி நடவடிக்கையால் இன்று அதன் மூலமும் வாழ்வை சீராக்க முடியாத நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறு குடும்பங்களில் காணப்படுகின்ற வாழ்வாதார நலிவு பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது. 2012ம் ஆண்டின் ஆய்வறிக்கையின் படி இலங்கையில் ஒரு இலட்சத்து 26 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளனர். இதில் வடக்கு கிழக்கு பகுதியில் மாத்திரம் 62935 மாணவர்கள் ஆகும். கிட்டத்தட்ட 50 வீதமான மாணவர்கள் வடகிழக்கை சேர்ந்தவர்களாகின்றனர். இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் குடும்பங்களில் காணப்படுகிற வாழ்வாதார நலிவு அல்லவா!

மணலாறு பகுதிகளில் தமிழர் விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டு அதில் சிங்களவர்களால் பயிர்ச்செய்கை செய்யப்படுகிறது. முந்திரிகைக்குளம் சிலோன் தியேட்டர்ஸ் கென் பார்ம் – டொலர் பார்ம் போன்ற தமிழர் பிரதேசங்கள் தற்போது சிங்கள பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

முந்திரிகைக்குளம் நெலும்வெவ என்றும் ஆமையன்குளம் சுதுஎப்பன்வெவ என்றும் சர்ப்பம் கிடந்த மருதமடு கலம்பவெவ என்றும் மாற்றப்பட்டிருப்பது இங்கு முன்வைக்கப்படுகிற சில உதாரணங்கள்.

 

இதுவரை 5 பிரதேசங்களாக இருந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் அனுராதபுரத்திலும் வவுனியாவிலும் முல்லைத்தீவிலும் என பகுதிகள் எடுக்கப்பட்டு தற்போது வெலிஓயா என்கிற பிரதேச பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதிலும் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் அனுராதபுரத்திலும் என நிலங்கள் எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் பிரதேசம் இணைக்கப்பட்டிருப்பது முல்லைத்தீவு மாவட்டத்தினுள். இவ்வாறான செயற்பாடுகள் முலம் மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் மெல்ல மெல்ல சிங்கள குடியேற்றங்கள் திணிக்கப்பட்டு நாளடைவில் அவை மெல்ல மெல்ல உட்பகுதிகளுக்கும் கொண்டுவரப்படுவதே நோக்கமுமாகிறது.

 

1881ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் 58.96%. 33.66%, 4.66% ஆக இருந்த தமிழ் முஸ்லீம் சிங்கள இனப்பரம்பல் 2012ம் ஆண்டில் 39.79%, 36.72%, 23.15% ஆக மாற்றம் பெற்றுள்ளது. 4.66% இலிருந்து 23.15% ஆக வளர்க்கப்பட்ட சிங்கள இனப்பரம்பல் திட்டமிட்டு தமிழர் பெரும்பான்மை இடங்களில் உள்ள தமிழர் இனப்பரம்பல் கோலத்தை சிதைப்பதைத்தான் வெளிக்கொணர்கிறது. இதுவே தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திலும் நடைபெற்ற வருகிறது; மிகவும் துரிதமாக.

 

மீளக்குடியேறிய தமிழ் மக்களுக்கு ஆங்காங்கே வீட்டுத்திட்டங்கள் குறையாக இருக்கும் நிலையில் மணலாறில் குடியேறிய சிங்களவர்களுக்கு தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு தற்போது நிரந்தர வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆனால் யுத்தத்தில் பேரழிவுகளை சந்தித்து மீள்குடியேறிய தமிழர்களில் ஒருவர் மட்டும் உள்ள குடும்பம், இருவர் மட்டும் உள்ள குடும்பம், மூவர் உள்ள குடும்பத்தில் 18 வயது தாண்டியவர் என்று எல்லாம் வகைப்படுத்தப்பட்டு சில நிறுவனங்களின் திட்டங்களுக்குள் அவர்கள் உள்ளடக்கப்படாமல் அவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் எல்லாம் காலதாமப்படுத்தப்படுகிறது.

 

இது ஒரு புறமிருக்க வீதிகள் என்று நோக்கும் போது பிரதான வீதிகள் எல்லாம் முறையாக செப்பனிடப்பட்டு இருக்கின்ற போதிலும் உள்வீதிகள் பெரும்பாலானவற்றில் பல்வேறு முறைகேடுகளே எஞ்சியுள்ளன. தரமாக செப்பனிடப்படாத வீதிகள் ஒருபுறும் பூர்த்தியாக்கப்படாத வீதிகள் மறுபுறம் என காணப்படும் நிலை முறையற்ற விதத்தில் அல்லது தரமற்றவர்களிடம் தான் மேற்படி செயற்திட்டங்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக உணரமுடிகிறது.

 

இவ்வாறு வீதி முதற்கொண்டு வாழ்வாதாரம் வரை மக்கள் பல்வேறு இன்னல்களில் சிக்கி வாழ்ந்து கொண்டு வரும் நிலையில் இவற்றுக்கெல்லாம் மாற்றம் வந்து தம் வாழ்வில் சுபீட்சம் பரவும் என்றெண்ணி தேர்தலில் வாக்குபோட்டு எம்மை வடமாகாண சபைக்கு அனுப்பியும் அதன் மூலம் எந்தவொன்றையும் சரிவர செய்ய முடியாத நிலையிலேயே மாகாணசபை இயங்கவைக்கப்படுகிறது. எனினும் மாகாணசபை உறுப்பினர்கள் என்ற உரிமையுடன் நாளுக்கு நாள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தாவது மக்களின் பிரச்சினைகளை அறிந்து, வெளியுலகிற்கு கொண்டுவந்து தமிழின அடக்குமுறைகளையும் சிதைப்புகளையும் வெளிக்கொண்டுவரும் செயற்பாடுகளை எவராலும் தடுக்க இயலவில்லை; தடுக்க முடியாது!

 

 

SHARE