குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையிட்ட மூவர் கைது

24

 

குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் நகைகளை கொள்ளையிட்ட மூவரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(26.04.2024) இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணை

வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி ஊடாக கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு கடந்த 17 ஆம் திகதி அதிகாலை குறித்த பெண் தனது குழந்தையுடன் மோட்டர் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன்போது வீதியில் முகத்தை துணிகளால் கட்டியபடி நின்ற மூன்று இளைஞர்கள் குறித்த பெண்ணை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததுடன், குறித்த பெண்ணின் மோட்டர் சைக்கிளையும் பறித்து சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிதம்பரபுரம், மதவுவைத்தகுளம், சிறிராமபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34 தொடக்கம் 35 வயதுடை 3 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களினால் அபகரிக்கப்பட்ட மூன்று அரைப் பவுண் நகைகள் உருக்கப்பட்ட நிலையில் யாழில் உள்ள நகைகடை ஒன்றில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் பறித்து செல்லப்பட்ட மோட்டர் சைக்கிள் கனகராயன்குளம் பகுதியில் விற்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரண்டு பென்ரன் மற்றும் மடிக்கணினி என்பனவும் சந்தேகநபர்களிடம் இருந்து மேலதிகமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இவை கனகராயன்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து திருடப்பட்டவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் பின் குறித்த மூவரையும், சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE