கோர விபத்து! பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கை

14

 

கார் பந்தய விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிதியுதவி அளிக்க அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இலங்கை ஆட்டோமொபைல் ஸ்போர்ட்ஸின் (SLAS) தலைவர்அஷ்ஹர் ஹமீம் (Ashhar Hameem) தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த விபத்து தொடர்பில் இலங்கை இராணுவம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி தலைமையில் மூவர் கொண்ட சுயாதீன குழுவொன்று இலங்கை ஆட்டோமொபைல் ஸ்போர்ட்ஸினால் (SLAS) நியமிக்கப்பட்டுள்ளது.

எந்த தொடர்பும் இல்லை
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தியத்தலாவையில் நடந்த Fox Hill Super Cross 2024 நிகழ்வின் போது இடம்பெற்ற விபத்தில் 7 உயிர்களை இழந்ததுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர்.மேலும் ஏழு பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருக்கின்றனர்.

இந்நிலையில் அந்த நிகழ்வு குறித்து எழுந்துள்ள சில தவறான எண்ணங்களை நிவர்த்தி செய்ய விரும்புகிறோம்.

விபத்து இடம்பெற்ற நாளன்று இரவில் திட்டமிடப்பட்டிருந்த “Fox Hill Journey” நிகழ்வில் SLAS மற்றும் இலங்கை இராணுவம் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை. இது எங்கள் அமைப்பு தொடர்பில் தவறான புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஏதேனும் குழப்பம் அல்லது மன உளைச்சல் ஏற்பட்டிருப்பின் அதற்கு எங்கள் ஆழ்ந்த வருந்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

பாதுகாப்பு வழிகாட்டுதல்
மேலும் ஆர்வத்தின் காரணமாக, பாதைக்கு அருகில் பாதுகாப்பற்ற இடங்களில் தங்களை நிலைநிறுத்திய பார்வையாளர்கள் இருந்ததை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

எல்லா நேரங்களிலும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்த வேண்டும் என்றாலும், எந்தவொரு தனிநபரையோ அல்லது குழுவையோ நாங்கள் குற்றம் சாட்ட முற்படுவதில்லை.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஆதரிப்பதிலும், SLAS உரிமம் பெற்ற போட்டியாளர்களுக்கு ஆதரவாக நிற்பதிலும் எங்களின் கவனம் இப்போது உள்ளது.

சம்பவத்தின் காரணங்களைப் புரிந்துகொள்வதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும் முழுமையான விசாரணையை நடத்துவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று ஹமீம் கூறியுள்ளார்.

SHARE