சுவிஸில் பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நைஜீரிய நாட்டவரான இளைஞரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பிறந்த இந்த நபர் தமது 14-வது வயதில் இருந்தே திருட்டு, கொலை முயற்சி, பாலியல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பலமுறை தண்டனையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் ஒருவரை கத்தியால் பலமுறை தாக்கிய வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு சூரிச் மாகாண இடம்பெயர்வு அலுவலக அதிகாரிகள் அதிரடி முடிவை எடுத்துள்ளனர். அதன்படி குறித்த நபரின் 4 ஆண்டுகால தண்டனை முடிவுக்கு வந்ததும் சுவிஸ் நாட்டில் இருந்து நாடுகடத்த வேண்டும். மட்டுமின்றி சூரிச் மாகாண நிர்வாக நீதிமன்றம் குறிப்பிட்ட நபருக்கான குடியிருப்பு அனுமதியையும் ரத்து செய்தாக உறுதி அளித்துள்ளது. ஆனால் இந்த முடிவு இறுதியானது அல்ல.
ஆங்கிலம் அறவே தெரியாத அந்த இளைஞருக்கு நைஜீரியா போன்ற நாட்டுக்கு நாடுகடத்தப்படுவது என்பது கடினமான விடயமென நீதிமன்றம் ஒப்புக்கொண்டபோதும், தற்போது 28 வயதே ஆகும் இளைஞர் என்பதால் இது ஒரு சவாலாக அவர் ஏற்றுக்கொள்வார் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நபருக்கு பலமுறை வாய்ப்புகள் வழங்கியிருந்தும் அதை பயன்படுத்த அவர் தவறியதும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் முக்கியம் என்பதாலும் நீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளது.
சுவிஸ் நாட்டில் இருந்துகொண்டு கடினமான குற்றங்கள் புரியும் நபர்களுக்கு அந்த நாட்டின் கடவுச்சீட்டு இல்லாது இருந்தால் 15 ஆண்டுகள் வரை நாடு கடத்த சட்டத்தில் வகையுள்ளது.
தற்போது சுவிஸில் வாழும் 25% மக்களுக்கு அந்த நாட்டின் குடியுரிமை இல்லை, இருப்பினும் இவர்களில் 300,000 பேர் வெளிநாட்டு பெற்றோருக்கு சுவிஸில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.