சென்னை பந்துவீச்சை நொறுக்கிய லக்னோ: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

21

 

குயின்டன் டி காக் மற்றும் கே.எல் ராகுலின் அதிரடி ஆட்டத்தால், லக்னோ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஜடேஜா 34 பந்தில் அரைசதம்
இன்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே மற்றும் ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினர்.

ரச்சின் ரவீந்திரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கெய்க்வாட் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரகானேவுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ரகானே 36 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் இறங்கிய ஷிவம் துபே (3), இம்பேக்ட் வீரர் சமீர் ரிஸ்வி (1) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து ஜடேஜாவுடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஜடேஜா 34 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயீன் அலி 20 பந்தில் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கே.எல்.ராகுல் 82
அடுத்து வந்த தோனி 9 பந்துகளில் 28 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்தது. ஜடேஜா 57 ஓட்டங்களுடனும் தோனி 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குயின்டன் டி காக் மற்றும் அணித்தலைவர் கே.எல். ராகுல் இருவரும் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர்.

இருவரும் அரைசதம் கடந்த நிலையில், குயின்டன் டி காக் 54 ஓட்டங்களிலும், கே.எல்.ராகுல் 82 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு லக்னோ அணி 180 ஓட்டங்கள் எடுத்து இலக்கை கடந்தது.

நிக்கோலஸ் பூரான் 23 ஓட்டங்களுடனும் மார்கஸ் ஸ்டோனிஸ் 8 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

SHARE