இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராகவும், நட்சத்திர வீரராகவும் திகழ்ந்து வரும் டோனி, தன்னை ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரனாக, நல்ல மனிதனாக மாற்றிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
நியூயார்க் நகரில் நடந்த ‘MS Dhoni: The Untold Story’ என்ற தன் படத்துக்கான ப்ரமோ விழாவில் டோனி பேசியதாவது, கடந்த 2007ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த உலக கிண்ணத் தொடரில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி முதல் சுற்றுடன் வெளியேறியது.
தோல்விக்குப் பின் நாங்கள் டெல்லியில் வந்து இறங்கியதும் ஏராளமான ஊடகங்கள் எங்களை வட்டமிட்டன. உடனடியாக நாங்கள் பொலிஸ் வாகனத்தில் அமர்ந்து சென்றோம்.
நாங்கள் சென்ற பாதை குறுகலானது. ஆனால், ஊடக வாகனங்கள் எங்களை ‘சேஸ்’ செய்ய முயன்று கொண்டிருந்தன. வீடியோ எடுப்பதற்காக எங்கள் மீது வெளிச்சம் பாய்ந்தது.
நாங்கள் எதோ கொலைகாரர்கள் போல, பயங்கரவாதிகள் போன்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தனர். இந்த சம்பவம் என்னை அப்படித்தான் நினைக்க வைத்தது.
ஒரு வழியாக காவல் நிலையத்துக்கு சென்றதும், அங்கு 20 நிமிடங்கள் இருந்து, பின் எங்கள் காரில் ஏறி சென்றோம். இந்த சம்பவம்தான் என்னை ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரனாக, நல்ல மனிதனாக மாற்றியது என டோனி கூறியுள்ளார்.