இலங்கை நாடாளுமன்றத்தின் வடபகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக வடமாகாணசபை முதலமைச்சர் ‘விக்னேஸ்வரன்’ அவர்களே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் மஹிந்த அரசில் அமைச்சுப் பதவி வகித்தவரும் இடதுசாரியாக மிக நீண்டகாலம் இருந்து நேர்மை காத்துவிட்டுப் பின்னர் நேர்மை தவறி மஹிந்த அரசில் அமைச்சுப் பதவி வகித்தவருமான ‘வாசுதேவ நாணயக்கார’ அவர்களின் சம்பந்தியும் கொழும்புக் கனவானுமாவார்.
அவர் சாவகச்சேரியில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றின் போது விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடர்பில் குறைகூறி விமர்சனம் செய்தமையையிட்டு அங்கு குழுமி நின்ற மக்கள் அவர் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்வந்தமையும் அதன் விளைவாக அந்நிகழ்விலிருந்து நழுவிச் சென்றமையும் தெரிந்ததே.
இத் தன்மையைத் தன்னகத்தே கொண்டு கனவான் அரசியல் நடத்தும் விக்னேஸ்வரன் பார்வையில் தென்னிலங்கையின் சிங்கள அரசியல்வாதிகள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதி மோசடி செய்து தமிழ் மக்களுக்கும் தமிழ்ப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் செல்ல வேண்டிய பணத்தைத் தங்கள் வங்கிக் கணக்குகளுக்குள் முடக்கி விடுகின்றார்கள் எனக் குற்றம் சுமத்துவதை நியாயப்படுத்தித் தானும் அவர்களுடைய சுருதியில் வடக்கின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவில் நிதிக் கையாடல்களில் ஈடுபட்டிருப்பதாகக் கூறித் தான் தப்பிக்கொள்ள முயற்சிக்கின்றார்.
உண்மையில் சிங்கள அரசியல் கனவான்களின் அனுசரனையோடும், அரவணைப்போடும் விக்னேஸ்வரன் அவர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டாலும் கூட அவரால் குற்றஞ்சாட்டப்படும் வட பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதி மோசடிகளில் ஈடுபட்டதற்கான தகுந்த ஆதாரங்கள் எதுவுமேயில்லையெனலாம்.