தேர்தல் வேட்பாளர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்

18

 

ஜனாதிபதித் தேர்தலின் (Presidential Election) போது ஏராளமான வேட்பாளர்கள் களமிறங்கும் சாத்தியம் காணப்படுவதாக அரசியல் கட்சிகளின் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதுவரை 7 வேட்பாளர்கள், தாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதிகூடிய வேட்பாளர்கள்
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, மவ்பிம ஜனதாக் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோருக்கு மேலதிகமாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் பேரன் இஷான் ஜயவர்த்தன ஆகியோர் இவ்வாறு தாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

இவர்களுக்கு மேலதிகமாக அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ச, பாட்டலி சம்பிக ரணவக, தம்மிக பெரேரா உள்ளிட்டோரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் நாட்டத்தில் உள்ளனர்.

அந்த வகையில் இலங்கை (Sri Lanka) வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் களமிறங்கும் ஜனாதிபதித் தேர்தலாக இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE