தேவாட்டியா அதிரடி: பஞ்சாப்பை வீழ்த்திய குஜராத் அணி

19

 

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றுள்ளது.

சுழற்பந்து வீச்சில் சிக்கி
இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் துடுப்பாட்டம் தெரிவு செய்தார்.

இதனையடுத்து பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாம் கரண் – பிரப்சிம்ரன் சிங் ஒரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இருவரும் ஆட்டமிழந்த பின் அணியின் நிலைமை தலைகீழ் ஆனது.

குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சில் சிக்கி பஞ்சாப் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது. குஜராத அணி வீரர் சாய் கிஷோர் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கடைசி கட்டத்தில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ஹர்பிரித் பாட்டியா ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை மீட்டெடுக்க உதவினார். இதில் பிரார் 12 பந்துகளில் 29 ஓட்டங்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் பஞ்சாப் 20 ஓவர்களில் 142 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 35 ஓட்டங்கள் அடித்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

தேவாட்டியா 36 ஓட்டங்கள்
இதனையடுத்து 143 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் விருதிமான் சகா மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

இந்த ஜோடியில் சகா 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து நிதானமாக ஆடிய சுப்மன் கில் ( 35 ), அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் ( 4 ), ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய சாய் சுதர்ஷன் ( 31 ), ஓமர்சாய் ( 13 ), ஷாரூக்கான் ( 8 ), ரஷித் கான் ( 3 ) என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

முடிவில் தேவாட்டியா 36 (18) ஓட்டங்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் குஜராத் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து146 ஓட்டங்கள் எடுத்தது.

பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளும், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதனையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

SHARE