படகில் குழந்தை பிரசவித்த தாய்! யாழ் சுகாதார பணிமனை விளக்கம்

19

 

யாழ். போதனா வைத்தியசாலைக்கு (Jaffna teaching hospital) இடமாற்றம் செய்யப்பட்ட கர்ப்பிணி தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெளிவுபடுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம்
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அண்மையில் மேற்படி விடயம் சம்பந்தமாக பல ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பான உண்மைநிலையை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

குறித்த கர்ப்பிணி தாய் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது கடமையிலிருந்த வைத்திய அதிகாரியும் குடும்பநல உத்தியோகத்தரும் கர்ப்பிணி தாயுடன் படகில் சென்றுள்ளனர்.

இவருக்கு படகில் பிரசவம் சம்பவித்தபோது கடமையிலிருந்த வைத்திய அதிகாரிகள் இருவருமே பிரசவத்தை கையாண்டனர்.

தற்போது நயினாதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு படகு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனை திருத்தி பழைய நிலைக்கு கொண்டுவர முடியாதென தொழிநுட்ப ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எனவே புதிய நோயாளர் காவு படகினை பெற்றுக் கொள்ளும்வரை தற்காலிக ஏற்பாடாக பயணிகள் சேவையில் ஈடுபடும் படகுகளை வாடகைக்கு அமர்த்தியே நோயாளர்களை இடமாற்றம் செய்கின்றோம்.

அவ்வாறு நோயாளர்களை இடமாற்றம் செய்யும் போது நோயாளர்களும் மருத்துவ பணியாளர்களும் மட்டுமே அப்படகில் பயணம் செய்வார்கள். அப்போது வேறு பயணிகள் யாரும் அப்படகில் பயணம் செய்வதில்லை.

மேற்படி செய்தியில் குறிப்பிட்ட கர்ப்பிணி தாய் சாதாரண படகில் அனுப்பப்பட்டதாகவும் படகில் இருந்த பயணிகளே பிரசவம் பார்த்ததாகவும் குறிப்பிடப்பட்டமை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE