பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி

178

டொலரின் பெறுமதி அதிகரிப்பதால் அச்சமடையத் தேவையில்லை என்றும், இந்த நிலைமையை எதிர்கொள்ள முடியும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சியடைவதால் டொலரின் பெறுமதி அதிகரித்து ஏனைய நாடுகளின் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைகின்றது.

இந்த நிலைமை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும், இந்த நிலைமையை எதிர்கொள்ள முடியும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.

தற்போது அந்நிய செலாவணி கையிறுப்பில் 9,000 மில்லியன் டொலர் உள்ளது. இந்த வருட இறுதியில் 11,000 மில்லியன் டொலராக இருக்கும்.

இந்த நிலைமைகளுக்கு முகங்கொடுத்தே கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து மே மாதம் 11 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது 3.2 வீதம் இலங்கை ரூபாய் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

அதிலும் ஏப்ரல் மாதத்திலேயே இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய தகவலின்படி டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி 159.55 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE