போதனா வைத்தியசாலையின் அசமந்தம்: இறுதிச் சடங்கில் ஏற்பட்ட குழப்பம்

15

 

போதனா வைத்தியசாலையின்(Jaffna teaching hospital) அசமந்த போக்கு தொடர்பில் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் (22) ஒருவர் இறந்த நிலையில் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் மீண்டும் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கருங்காலி, காரைநகர் பகுதியில் வசித்து வந்த 71 வயதுடைய சின்னையா என்பவரது சடலமே மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணை
குறித்த நபர் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி சங்கானைப் பகுதியில் வீதியை கடக்க முற்பட்டவேளை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானார்.

இதனையடுத்து சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(21) அதிகாலை 2.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விபத்தில் ஏற்பட்ட மரணம் என்ற காரணத்தினால் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மானிப்பாய் பொலிஸார் வைத்தியசாலைக்கு சென்றவேளை சடலம் இறுதிச்சடங்கு வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் மீண்டும் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னரே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை தரப்பின் அசமந்தமான இச்சம்பவத்தினால் இறுதிச் சடங்குகளில் தடை ஏற்பட்டதுடன் வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்பட்டுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் யாழ். போதனா வைத்தியசாலையில் தினமும் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்று வரும் நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனக்குறைவே இதற்கு காரணம் என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

SHARE