வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த 01 வருடமும் 6 மாதங்களுமான சிறுமி மதில் இடிந்து வீழ்ந்து மரணமானதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டெடன் தோட்டத்தைச் சேர்ந்த வை.லக்மிதா என்ற சிறுமியே இவ்வாறு மரணமானார்.
10.08.2016 புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் தனது பெரிய தந்தையின் வீட்டு முற்றத்தில் அக்காவுடன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் வீட்டு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த மதில் உடைந்ததால் 5 அடி பள்ளத்தில் வீழ்ந்த சிறுமி படுகாயமடைந்துள்ளார். உடனடியாக வட்டவளை வைத்தியசாலைக்கு உறவினர்களினால் கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றி மரணமானதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த சிறுமிக்கு இரண்டு சகோதரிகள் உள்ளதாகவும் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்