மனித எச்சங்களை உடற்கூறு பரிசோதனைக்கு ￰உட்படுத்துவதே உண்மையை கண்டறிய வாய்ப்பாகும் – மன்னார் ஆயர்

156
(மன்னார் நகர் நிருபர்) 
மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித எச்ச அகழ்வு பணியை  மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் சகிதம் நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆயர் அங்கு பணிபுரியும் அதிகாரிகளுடன் உரையாடியது தொடர்பாக ஆயரிடம் வினவியபோது, நாங்கள் தற்பொழுது மன்னாரிலில் நடைபெறும் மனித எச்சங்கள் அகழ்வு பணியை மேற்கொள்ளும் இடத்துக்குச் சென்று சற்று தெரிந்து கொள்வதற்காக  அவ்விடத்துக்குச் சென்றிருந்தோம்.
மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டதும் அரசு இது விடயத்தில் கவனம் செலுத்தி இதன் நிலையை கண்டு பிடிக்கும் நோக்குடன் இவ் வேலையை முன்னெடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டது.
தற்பொழுது கண்டு பிடிக்கப்பட்டு வரும் இவ் எலும்புக்கூடுகள் எந்த காலத்துக்குரியது என உடன் கண்டு பிடிக்க முடியாதுபோல் தெரிகின்றது.
இந்த இடத்தில் ஒரு பக்கத்தில் குப்பைத் தொட்டியும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இங்கு அதிலிருந்து பிஸ்கட் பக்கற் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதிலிருந்து ஓரளவு எந்த காலத்திலுள்ளது என்பதைக் கொண்டும் ஆய்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அகழ்வு செய்யப்படும் ஒவ்வொரு இடத்தையும் பகுதி பகுதிகளாக பிரித்து எந்தெந்த இடத்தில் என்னென்ன கண்டுபிடிக்கப்படுகின்றது என்பதை பணியாளர்கள் அளவீடு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மனித உடம்பு விடயங்களை நன்கு தெரிந்து வைத்துள்ளவர்கள் மூலமே இவ் பணி நடைபெறுவதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
அங்கு நடக்கும் அகழ்வை நோக்கும்போது கடல் மட்டத்துக்கு சற்று மேலே வரைக்கும் தோண்டப்பட்டுள்ளதையும் கவனிக்கக் கூடியதாக இருந்தது.
நான் அங்கு கவனித்தபோது மண்டையோடுகள் வெவ்வேறாக எனக்கு தென்படவில்லை. பெரும்பாலும் ஒரே இடத்தில் காணப்பட்டதாகவே இருந்தது.
மன்னாரில் 14 ம் நூற்றாண்டில் காலரா என்ற நோய் பரவிய காலத்தில் நடைபெற்ற சம்பவமா அல்லது அண்மை காலத்தில் நடைபெற்ற சம்பவமா எனவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இதற்கெல்லாம் உடற்கூறு பரிசோதனை செய்வதன் மூலமே உண்மை நிலையை கண்டறிய முடியும். தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு வரும் மண்டையோடுகளில் சிறுவருடையதும் காணப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது என தெரிவித்தார்.
SHARE