இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கையின் அரசியல் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் விளங்குவதனை இல்லாமல் செய்வதற்கான முன் ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதற்கு ஏற்ப சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களை ஆளுந் தரப்பினர் தயார்படுத்தி வைத்துள்ளார்கள். ஆளுந் தரப்பினரின் இந்த செயற் திட்டத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்றவர்களாக முஸ்லிம் சமூகம் இருக்கப் போகின்றது.
இதனை முஸ்லிம் அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளின் மூலமாகவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் கருத்துக்களின் மூலமாகவும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இத்தருணத்தில் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும், பொது மக்களும் விழித்துக் கொள்ள வேண்டும்.
இல்லாதுவிடின் முஸ்லிம்கள் தமது விகிதாசாரத்திற்கு குறைவான பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசியல் பலமற்றதொரு சமூகமாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்படுவதனை தவிர்க்க முடியாது. முஸ்லிம்கள் இந்த ஆபத்தை அலட்சியம் செய்துகொள்ள முடியாது.
கடந்த காலங்களைப் போன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி இனியும் இருப்பார்களாயின் தமது எதிர்கால சந்தியினருக்கு செய்கின்ற மிகப்பெரிய வரலாற்றுத் துரோகமாகவே இருக்கும்.
1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி அதிலுள்ள தேர்தல் முறையையும், நிறைவேற்று ஜனாதிபதி முறையையும் ஒழித்து மாற்று திட்டங்களை முன் வைக்கவுள்ளார்கள்.
இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பூரண சம்மதம் தெரிவித்துள்ளது. அக்கட்சி தமிழர்களுக்கு எத்தகைய தீர்வு வேண்டுமென்று அறுதியாக கூறியுள்ளதுடன், தமது யோசனைத் திட்டத்தையும் முன் வைத்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸும் அரசியல் மாற்றத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
ஆனால், இக்கட்சி இன்னும் முஸ்லிம்கள் சார்பான அரசியல் தீர்வு திட்டத்தை முன் வைக்கவில்லை. இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு தாங்கள் விட்டுக் கொடுப்புடன் செயற்படுவதற்கு தயார் என்று மாத்திரம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஏனைய முஸ்லிம் கட்சிகளும் அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஆதரவாகவே உள்ளது.
1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விகிதாசார தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், தேசிய காங்கிரஸும் தெரிவித்துள்ளது. இக்கட்சிகள் வடக்கும், கிழக்கும் பிரிந்திருக்க வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் விகிதாசார தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
வடக்கும், கிழக்கும் இணைய வேண்டுமா அல்லது பிரிய வேண்டுமா என்பதில் தெளிவற்ற போக்கை கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றது. இக்கட்சி அரசியல் யாப்பு மாற்றத்தில் கூட தமது வழமையான நழுவல் போக்கையே கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் அரசியலுக்கு தலைமை வகித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியாக உள்ள முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் யாப்பு மாற்றத்திலும் நழுவல் போக்கை கடைப்பிடித்துக் கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூயதல்ல.
இதே வேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கும், கிழக்கும் இணைக்கப்படல் வேண்டும். இதற்கு முஸ்லிம்களும் ஆதரவு தர வேண்டும். இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படும். வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது ஒரு முதலமைச்சருடன் சம்பந்தப்பட்ட விடயமல்ல என்று தெரிவித்துள்ளார். இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருப்பதன் மூலம் அக்கட்சிக்கு புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படவுள்ள விடயதானங்கள் தெளிவாகத் தெரியும் என்று கருத முடியும்.
புதிய அரசியல் யாப்பில் எவ்வாறான அதிகாரங்கள் சிறுபான்மையினருக்கு வழங்கப்படவுள்ளன என்று இன்னும் பகிரங்கமாக தெரியாது. புதிய அரசியல் யாப்பு இவ்வாறுதான் அமையவுள்ளதென்று அரசாங்கம் கூட தெரிவிக்கவில்லை. இந்நிலையில் வடக்கும், கிழக்கும் இணையும் போது முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று எவ்வாறு இரா.சம்பந்தனால் உறுதி கூற முடியும்?
இணைந்த வடக்கு, கிழக்கை வேண்டியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன் வைத்துள்ள அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் அபிலாசைகள் குறித்து முன் வைத்துள்ள யோசனைகள் யாவை என்று தெரிவிக்காத நிலையிலும், முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் எந்தவொரு அரசியல் தீர்வு யோசனையையும் முன் வைக்காது இருக்கின்ற நிலையிலும் முஸ்லிம்களினால் இணைந்த வடக்கு, கிழக்கிற்கு மாத்திரமன்றி புதிய அரசியல் யாப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
வடக்கும், கிழக்கும் இணைவதாக இருந்தாலும், இவ்விரு மாகாணங்களும் தனித்தனியாக செயற்படுவதாக இருந்தாலும், புதிய அரசியல் யாப்பு என்று ஒன்று வர வேண்டுமாயின் அதில் என்ன இருக்கின்றதென்று தெரிந்து கொள்ளாமல் ஆதரிக்க முடியாது. எதுவுமே தெரியாத நிலையில் முஸ்லிம் கட்சிகள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவு அளிக்குமாயின் அச்செயல் அடிமைத் தனத்திற்கு சமமாகும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைந்த வடக்கு, கிழக்கு வேண்டுமென்று பகிரங்கமாக உரத்த குரலில் கேட்டுக் கொண்டிருக்கையில் முஸ்லிம் காங்கிரஸும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் மௌனமாக அரசாங்கம் தருவதையோ அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அதிஉச்ச வேண்டுகோள்களை நிறைவேற்றும் வகையிலோ அமையும் புதிய அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ள முடியாது.
தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டைய அரசியல் யாப்புக்கு மாற்றமாக முஸ்லிம் கட்சிகள் புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமாயின் புதிய அரசியல் யாப்பு மூலமாக முஸ்லிம்கள் இன்று பெற்றுக் கொண்டிருக்கும் பயன்களை விடவும் கூடுதல் பயன்கள் கிடைக்க வேண்டும். அதனை அறிந்து கொள்ள வேண்டுமாயின் புதிய அரசியல் யாப்பில் உள்ளவைகள் தெரிய வேண்டும்.
1978 ஆம் ஆண்டின் பின்னர்தான் 20 இற்கும் குறையாத முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அது மாத்திரமின்றி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதில் முஸ்லிம்களின் வாக்குகள் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்தி வந்துள்ளன.
இதனால், முஸ்லிம்களை பகைத்துக் கொண்டு எந்தவொரு ஜனாதிபதியாலும் செயற்பட முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பௌத்த இனவாதிகளின் அடக்கு முறைகளை கண்டு கொள்ளாதிருந்தமையால் அவர் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தார். அவருக்கு எதிராக முஸ்லிம்கள் வாக்களித்து தமது வாக்குப் பலத்தை காட்டினார்கள்.
இன்று மஹிந்தராஜபக்ஷ தான் முஸ்லிம்களின் விடயங்களில் பிழையாக வழி நடத்தப்பட்டதாக வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். முஸ்லிம்களின் ஆதரவை மீண்டும் கோருகின்றார். இந்நிலை புதிய அரசியல் யாப்பில் ஏற்படுவதற்கு எந்த அறிகுறிகளுமில்லை.
ஆகவே, முஸ்லிம்களை பொறுத்த வரை 1978 ஆம் ஆண்டை விடவும் சிறப்பானதொரு அரசியல் யாப்பு வருமா என்பது சந்தேகமாகும். இதனை விடவும் சிறப்பானதொரு அரசியல் யாப்பையே முஸ்லிம்களினால் ஆதரிக்க முடியும். ஆனால், இன்று முஸ்லிம் கட்சிகள் புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் நலன்களை கருத்திற் கொள்ளாது, அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருப்பது முஸ்லிம்களின் எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு சமமாகும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு பாதிப்பு ஏற்படாதென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.
முஸ்லிம்களையும் அரவணைத்துக் கொண்டு செல்ல வேண்டுமென்ற எண்ணங் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அக்கட்சியுடன் நெருக்கமான உறவகளை பேணிக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து புதிய அரசியல் யாப்பில் சிறுபான்மையினரின் அபிலாசைகளை உள்ளடக்கிய ஆலோசனைகளை முன் வைக்க முடியவில்லை. முஸ்லிம் கட்சிகளுக்கும், முஸ்லிம் காங்கிரஸிற்கும் தெரியாமல் தமது அரசியல் ஆலோசனைகளை அரசாங்கத்திடமும், சர்வதேசத்திடமும் முன் வைத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது கோரிக்கைகளுக்கு முஸ்லிம்களின் ஆதரவையும் கோரிக் கொண்டிருப்பதும், அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் மௌனமாக இருப்பதும் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன.
புதிய அரசியல் யாப்பை வேண்டி நிற்கும் முஸ்லிம் கட்சிகளிடம் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் சில கேள்விகளை கேட்டுள்ளார்.
அதாவது, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற அந்தஸ்த்து இருக்க வேண்டுமா, வேண்டாமா என்று சொல்ல வேண்டும். மாவட்ட முறையில் 05 வீத வெட்டுப் புள்ளியின் அடிப்டையில் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய இந்த முறை இருக்க வேண்டுமா, தேவையில்லையா என்று சொல்ல வேண்டும். 1978 ஆம் ஆண்டின் பின்னர் முஸ்லிம்கள் பேரம் பேசும் சக்தியாக உள்ளார்கள். இந்த சக்தி இருக்க வேண்டுமா, இல்லையா என்று சொல்ல வேண்டும்.
புதிய யாப்பு மாற்றத்தின் பின்னர் முஸ்லிம்களுக்கு இந்த அரசியல் சக்திகள் இருக்குமா என்று சொல்ல வேண்டும்.
கிழக்கு முஸ்லிம்களின் அபிலாசையாக உள்ள எங்களை நாங்களே ஆளும் தனி அலகு இருக்குமா இல்லையா என்று சொல்ல வேண்டும். ஒளித்து நாடகமாடக் கூடாது.
முஸ்லிம் காங்கிரஸ், அகில மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் எந்தக் கட்சியாக இருந்தாலும் எங்களுக்கு யாப்பு மாற்றம் தேவையில்லை என்று ஒரு வரிதான் எழுத வேண்டும். நமக்கு எல்லாமே 1978 ஆம் ஆண்டில் இருக்கின்றது. வேறு எந்த யாப்பும் முஸ்லிம்களுக்கு இது போன்று இருக்காது. அதுதான் இணக்க அரசியல் யாப்பை தந்தது. அதுதான் முஸ்லிம்களை பேரம் பேசும் சக்தியாக மாற்றியது. அதுதான் 17 வருடங்கள் ஆட்சி செய்த ஐ.தே.க.வின் ஆட்சியை மாற்றியது எனக் கேட்டுள்ளார். இவரின் இக்கேள்விகளுக்குரிய நியாயமான பதில் மூலம்தான் புதிய அரசியல் யாப்பை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டும்.
முஸ்லிம் கட்சிகள் ஒரு தனி நபரின் அபிலாசைகளுக்கும், சிலரின் பதவி மோகங்களை மையப்படுத்தியுமே முடிவுகளை எடுத்துச் செயற்பட்டு வந்துள்ளன. அவ்வாறுதான் புதிய அரசியல் யாப்பு விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் செயற்பாடுகள் அமையவுள்ளன. தாங்கள் வெற்றி பெறுவதற்குரிய தேர்தல் தொகுதியை பெற்றுக் கொண்டு முழு முஸ்லிம் சமூகத்தையும் வீதியில் நிறுத்துவதற்கு துணை போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
இஸ்லாம் மார்க்கம் கூட எழுத்து மூலம் உடன்படிக்கைகளை வைத்துக் கொள்ளுமாறு சொல்லிக் கொண்டிருக்கையில் குர்ஆன், ஹதீஸ் என்று கட்சியின் யாப்பை வைத்துக் கொண்டு புதிய அரசியல் யாப்பு எதனைத் தரப்போகின்றதென்று தெரியாமல் அல்லது தெரிந்தும் மக்களுக்கு அதனை தெரிவிக்காமல் தங்களின் தனிப்பட்ட அபிலாசைகளுக்காக சமூகத்தின் எதிர்கால சந்ததியினரை சந்தியில் நிறுத்த முனைந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு முஸ்லிம் அரசியல் தலைமைகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதனை முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் வெளிப்படையாக சுட்டிக் காட்ட வேண்டும். முஸ்லிம்களின் அபிலாசைகள் இவைதான் என்று அடையாளப்படுத்தி அவற்றை அடைந்து கொள்வதற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். முஸ்லிம்களின் எதிர்காலத்தை முஸ்லிம் கட்சிகளிடமோ, அரசாங்கத்திடமோ, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமோ ஒப்படைக்க முடியாது.
எங்களின் தலைவிதியை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இதனை ஒளித்து வைத்து நாடகமாடி, நல்லது நடக்கும் என்று சொல்லிக் கொண்டு, விட்டுக் கொடுப்புக்கு தயார் என்று எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டு, அரசாங்கத்தின் அமைச்சர் பதவிகளுக்கு வாய் பிளந்து கொண்டு, கொந்தராத்துக்களுக்காக சேவகம் செய்து கொண்டு, தமது கடந்த கால குற்றங்களை மறைப்பதற்காக எல்லாவற்றிற்கும் தலையசைத்துக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளிடமும், அவற்றின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிடம் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது.