மேஷம் – ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

168

எடுத்த காரியத்தில் முனைப்புடன் செயல்படுத்துவதில் வல்லமை படைத்த மேஷ ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டில் தொட்டது துலங்க நல்வாழ்த்துகள். இந்த ஆண்டில் கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். இதுவரை சந்தித்த பிரச்சனைகள் பனி போல் விலகும். முடங்கி கிடந்த தடைபட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி வாய்ப்பை தரும் இனிய ஆண்டாக மாறும். இந்த ஆண்டு குரு மற்றும் சனியின் சஞ்சாரம் உங்களுக்கு மிகச் சாதகமாக உள்ளது. இதனால் இழந்த அனைத்து இன்பங்களும் உங்களைத் தேடி வரப்போகிறது. தொட்டது துளிர் விடும். பட்டது பூக்கும். ராகு/கேதுக்களின் நிலைப்பாடு சற்று சுமாராக உள்ளது. தன்னம்பிக்கையுடன் உரிய வழிபாட்டு முறைகளை கடைபிடித்தால் தெய்வத்தின் அருட்கடாட்சம் கிடைக்கும். முன்னேற்றம் முழு வளர்ச்சியுடன் அனைத்து நன்மைகளையும் அடைய முடியும்.

இனி இந்த ஆண்டிற்கான விரிவான பலன்களைப் பார்க்கலாம்.

குருவின் சஞ்சார பலன்கள்: மேஷ ராசிக்கு 9,12ம் அதிபதியான குரு பகவான் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் ஏப்ரல் 22, 2023 வரை ஆட்சி பலத்துடன் நிற்கிறார். அதன் பிறகு ராசிக்குள் அடியெடுத்து வைத்து ராகுவுடன் இணைந்து சனியின் 3ம் பார்வையைப் பெறுகிறார். பாக்கியாதிபதி குரு ராசிக்குள் நுழைவதால் தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் நடக்கும்.ஜென்ம ராசியில் நின்று திருமணம், குழந்தை பேறு, பேரன், பேத்தி, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்களை நடத்தப் போகிறார். தேவையற்ற கற்பனை, பயங்கள் அகலும். மன சஞ்சல மின்றி நிம்மதியாக தூங்குவீர்கள். தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். தெய்வ நம்பிக்கை, ஜாதக நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்ம பலம் கூடும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தகப்பனார் வழியில் ஆதரவும், அனுகூலமும் உண்டாகும். சிலர் தொழில், உத்தியோகத்திற்காக வெளிநாடு வெளி மாநிலத்திற்கு இடம் பெயரலாம்.சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகளும் துயரங்களும் விலகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். வயதிலும் அனுபவத்திலும் சிறியவர்கள் கூட அறிவும், ஆலோசனை வழங்கிய நிலை மாறும். குருவுடன் ராகு இணைவதால் அனுபவ அறிவு ,தன்னைத்தானே உணரும் சக்தியையும் அதிகரிக்க யோகாசனம் மிக அவசியம்.

சனியின் சஞ்சார பலன்கள்: மேஷத்திற்கு 10, 11ம் அதிபதியான சனி பகவான் ஜனவரி 17, 2023ல் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் நுழைகிறார். ஆண்டு முழுவதும் தொழில் ஸ்தான அதிபதி சனி பகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்று பல்வேறு விதமான லாபங்களை வழங்கப் போகிறார். இதனால் எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும். புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டமான காலம் இது. இதுவரை கற்ற அனுபவ தொழில் ஞானம் தற்போது பயன்படும். வியாபாரத்திற்கு முழுக்கு போடலாம் என்ற நினைத்தவர்களுக்கு கூட இந்த வருடம் தொழில் முன்னேற்றம் உண்டு. தொழிலாளர்கள் ஆதரவாக உதவி கரம் நீட்டுவார்கள். சிலர் வேலையில் இருந்து கொண்டு ஓய்வு நேரத்தில் சிறு தொழில் மூலம் வருமானம் ஈட்டலாம். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு, சம்பள உய்ர்வு என்று அனைத்துவிதமான நன்மைகளும் தேடி வரும். அரசு வகை ஆதாயம், அரசு உத்தியோகம் உண்டு. லாபச் சனியால் வருமானம் பெருகினாலும் ராசியில் சஞ்சாரம் செய்யும் குருவால் வரவுக்கு மீறிய சுப செலவும் இருக்கும். கையில் பணம் தாராளமாக புழங்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி மன நிறைவு, நிம்மதி அதிகரிக்கும். பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டில் வாழ்ப்பவர்களுக்கு வாழ்க்கை வசந்தமாகும். வழக்குகள் சாதகமாகும் அல்லது தள்ளுபடியாகும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். சொத்து மதிப்பு உயரும். கை நழுவிச் சென்ற பூர்வீகச் சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும். குரு உபதேசம், ஜோதிடம், மருத்துவம், யோகா, தியானம் போன்ற துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர், வெளி மாநிலத்தில் உள்ள ஆன்மீக சுற்றுலாத் தலங்களுச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.

ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்: ராசியில் நின்ற ராகு பகவான் அக்டோபர் 30, 2023ல் 12ம் இடம் செல்கிறார். 7ம் இடத்தில் நின்ற கேது பகவான் ஆறாமிடம் செல்கிறார். அக்டோபர் மாதம் வரை ராகு, கேதுக்களால் சற்று ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். சிலர் அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து எந்திரம், மந்திரம்,தந்திரம் என அழைந்து மிகுதியான பொருள் விரயத்தை விலை கொடுத்து வாங்குவார்கள். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். சேமிப்புகள், முதலீடுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் தரம் உயரும். சிலர் செயற்கை கருத்தரிப்பு மூலம் புத்திர பாக்கியம் அடைவார்கள். கண்கள் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் தேவை.

திருமணம்: கடந்த சில வருடங்களாக கோட்சார ராகு கேதுவினால் தடைபட்ட திருமணம் ஏப்ரல் மாதத்திற்கு மேல் திருமணம் நடைபெறும். பொருத்தமான ஜாதகம் வந்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். முதல் திருமணத்தில் தோல்வியை சந்தித்தவர்களுக்கு அடுத்த இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமையும். பெண்கள்: புதிய பெண் தொழில் அதிபர்கள் அதிகம் உருவாகுவார்கள். ஏற்கனவே சுய தொழிலில் இருக்கும் பெண்கள் தொழிலை அபிவிருத்தி செய்வார்கள். புதிய தொழில் நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் கடன் வழங்க நிதி நிறுவனங்கள் முன்வரும். பல பெண்கள் உபரி லாபத்தால் நீண்ட கால கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவார்கள். கணவர், புகுந்த, பிறந்த வீட்டினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். தீராத நோயால் அவதிப்பட்டவர்களுக்கு நோய் கட்டுப்படும்.

மாணவர்கள்: ராசிக்குள் குரு வந்து 5,9ம் இடத்தைப் பார்ப்பதால் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். படிக்கும் பாடம் நன்கு புரியும். வேற்று மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்கு வெளியூர், வெளிநாடு செல்லலாம். பேச்சுப் போட்டி, பட்டிமன்றங்களிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அசுவினி: சுய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். ஒரே இடத்தில் இருக்க முடியாமல் அடிக்கடி இடப் பெயர்ச்சி செய்து கொண்டே இருப்பீர்கள். அண்டை அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் மிக உயர்ந்த உன்னத நிலையை அடைய முடியும். கடன் வாங்கவும் கூடாது. கடன் கொடுக்கவும் கூடாது. முறையான திட்டமிடுதல் சங்கடங்களைத் தீர்க்கும். வீடு, வாகன யோகம் சித்திக்கும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். கல்லூரி உயர் கல்வி மாணவர்கள் பழைய நண்பர்களைப் பார்த்து மகிழ்வீர்கள். தொழில் ஒப்பந்தங்களை நன்றாக படித்த பின்பு கையெழுத்திடவும். அனைத்து விதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளிக்கும் தைரியம், மனப்பக்குவம் உண்டாகும்.

பரிகாரம்: ஜென்ம நட்சத்திர நாளில் துர்க்கை, காளி மற்றும் ப்ரத்யங்கரா தேவி போன்ற உக்ர தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடவும்.

பரணி: திட்டமிட்ட காரியங்களை மெல்ல மெல்ல வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்டு நடப்பதால் சந்தோஷம் கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வகையில் வீடு கலகலப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் மேம்படும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரத்து கூடும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். பூர்வீகச் சொத்து, தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். சிற்றின்ப நாட்டம் அதிகரிக்கும். வேற்று மொழி கற்பதில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: கல் உப்பு இட்ட நீரில் குளித்து வர எதிர்மறை எண்ணம் மட்டுப்படும்.

கிருத்திகை 1: தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் நேரமிது. உங்களின் புகழ்,அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். வேலையில்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.வெளியூர், வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு இடம் பெயர நேரும். பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும்.தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும். சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும்.பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். தடைபட்ட அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள்.வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.

பரிகாரம்: வெள்ளியிலான ஆபரணத்தை உடலில் அணிய எதிர்மறை சிந்தனை குறைந்து சிந்தித்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். புத்தாண்டிற்கு மேஷ ராசியினர் திருவண்ணாமலைசென்று வந்தால் இழந்த அனைத்து இன்பங்களும் மீண்டும் தேடி வரும். அப்படி ஒரு அருட்சக்தி இந்த மலைக்கு உள்ளதால் இந்த மலையை காந்தமலை என்றும் அழைக்கிறார்கள். ரீதியான அனைத்து தோஷங்களும் விலகி சுப பலன் நடக்கும். பெளர்ணமி அன்று மலை வலம் வந்தால் எப்பேர்ப்பட்ட கவலையும் நீங்கும்.

maalaimalar

SHARE