கல்கிஸ்சை மிஹிந்து மாவத்தையிலுள்ள யோசித்த ராஜபக்ஷவிற்கு அவரது பாட்டியினால் வழங்கப்பட்டதாக கூறப்படும் காணியை எதிர்வரும் 20 ஆம் திகதி அளவீடு செய்யுமாறு நீதிமன்றம் நேற்று(வியாழக் கிழமை) உத்தரவிட்டுள்ளது.
குறித்த காணி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினர், நில அளவை திணைக்களத்தின் பங்களிப்புடன் குறித்த காணியை அளவீடு செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டிருந்தனர்.
அத்துடன் காணி அளவீட்டு பணியின் போது சந்தேகநபர்கள், காணி உறுதி பத்திரத்தின் மூல பிரதியை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடுமாறும் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த கோரிக்கைகளை ஆராய்ந்த கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் லோஷனி அபயவிக்கிரமவினால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்சை மிஹிந்து மாவத்தையில் குறித்த சந்தேக நபர்களுக்கு சொந்தமாக சுமார் 60 பேர்ச்சர்ஸ் காணி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.