லா லிகா கால்பந்தில் இனவெறி: நெய்மர் கடும் அதிருப்தி

678

லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா, வில்லாரியல் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின்போது நிகழ்ந்த இனவெறி தாக்குதல் சம்பவத்துக்கு பார்சிலோனாவின் நெய்மர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வில்லாரியல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின்போது பார்சிலோனா வீரர் டேனி ஆல்வஸ், கார்னர் ஷாட் அடிக்கும்போது, எதிரணி ரசிகர் ஒருவர் அவர் மீது வாழைப்பழத்தை எறிந்தார்.

இதைப் பெரிதுபடுத்தாத ஆல்வஸ், அந்தப் பழத்தை எடுத்து சாப்பிட்டு விட்டு தொடர்ந்து விளையாட ஆரம்பித்தார்.

இது குறித்து ஆல்வஸ் கூறுகையில், “11 ஆண்டுகளுக்குப் பிறகு இனவெறித் தாக்குதலை தற்போது சந்தித்துள்ளேன். என் மீது எறிந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டது, நகைச்சுவைக்காக’ என்றார்.

பிரேசிலில் உலகக் கோப்பை நடைபெறும் வேளையில் நடைபெற்ற இச்சம்பவம் சர்வதேச கால்பந்து சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவத்தினால், அதிருப்தியடைந்த நெய்மர், “நாங்கள் எல்லாம் குரங்குகள்’ என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். சக வீரர்களின் ஆதரவும் ஆல்வஸýக்கு கூடி வருகிறது.

இச்சம்பவத்தைக் கண்டித்துள்ள ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர், “உலகக் கோப்பையில் இதுபோன்ற இனபாகுபாடு சம்பவத்தை சகித்துக் கொள்ள மாட்டோம். இனபாகுபாடு எத்தகைய வடிவில் வந்தாலும் அதனை நாம் எதிர்க்க வேண்டும்’ என்று டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

SHARE