வடக்கில் தொடரும் கைதுகளை ஏற்றுக்கொள்ள முடியாது! செல்வம் அடைக்கலநாதன்

202

selvam_adaikalanathan-400-seithy

முன்னாள் போரளிகள் மற்றும் தளபதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவர்களும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர்களும் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை வடக்கு மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

புனர்வாழ்வழிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவது என்பது மீண்டும் மஹிந்த ஆட்சியை ஞாபகப்படுத்துகின்ற செயற்பாடாக அமைந்துள்ளது.

மீண்டும் ஒரு அச்ச நிலையை எம் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

நேற்றைய தினம் கூட இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் மன்னாரில் வைத்து புலனாய்வுத்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியாக கடந்த சில தினங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைதுகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.

மஹிந்த ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்களை போக்க ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. புதிய ஜனாதிபதியும் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் தற்போது மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் இடம்பெற்ற கைதுகள் தற்போது மைத்திரி ஆட்சியிலும் இடம் பெறுகின்றது.

வடக்கில் இடம்பெற்று வருகின்ற குறித்த கைதுகளினால் தமிழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குறித்த கைதுகளை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மேலும் தெரிவித்தார்.

SHARE