ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அதிகளவானோரை பிரித்தெடுத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேறு கட்சியில் போட்டியிட வைக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

330

 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அதிகளவானோரை பிரித்தெடுத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேறு கட்சியில் போட்டியிட வைக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் ஏற்கனவே விரிவான வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் சர்வாதிகார அதிகாரங்களை நீக்கி, சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபிக்கும் 19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை வழங்குவதில்லை எனவும் மகிந்த குழுவினர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் கொடுக்காது, அதன் ஊடாக தற்போதைய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் தோற்ற பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.

எனினும் அவர் தற்போது, கட்சியின் கீழ் மட்ட பிரதிநிதிகளை ஒன்றிணைத்து கொண்டு தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கட்சியின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

மாவட்ட மட்டத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்கள் உட்பட சுதந்திர கட்சியின் கீழ் மட்ட பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை நடத்தி, அவர்கள் ஊடாக அறிக்கைகளை வெளியிட்டும் வருகிறார்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரை சுற்றியிருந்த, ஊழல் அமைச்சர்கள் இந்த சூழ்ச்சியான வேலைத்திட்டத்தை வழிநடத்தி வருகின்றனர்.

இந்த முயற்சி தோல்வியடைந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற செய்து, வேறு கட்சி ஒன்றில் அவர்களை பொதுத் தேர்தலில் போட்டியிட வைக்கவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டங்களை வகுத்துள்ளதாக தெரியவருகிறது.

மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவரும், நைஜீரியாவுக்கான இலங்கையின் தூதுவராக பணியாற்றியவருமான ஏ.எஸ்.பி. லியனகே என்பவர் பதிவு செய்துள்ள தொழிலாளர் கட்சியின் ஊடாக மகிந்த தலைமையில், சுதந்திர கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களை பொதுத் தேர்தலில் நிறுத்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழிலாளர் கட்சியின் சின்னத்தை மாற்றும் விண்ணப்பமும் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக மகிந்த ராஜபக்ச ஊடகங்களிடம் பொய்யான தகவலை வெளியிட்டு வருகிறார்.

எனினும் சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட பிரதிநிதிகளை தனது திட்டத்திற்காக ஒன்று திரட்டி வருகிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை மன்றக் கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது, கட்சியை ஒப்படைத்தால், அதனை முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

கட்சியை ஒப்படைத்துள்ள மகிந்த ராஜபக்ச, கட்சி விடயத்தில் தலையீடு செய்யக் கூடாது என்று மறைமுகமாக கூறியிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒப்படைத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கட்சியில் தலையீடுகளை மேற்கொள்ளவில்லை எனவும் எந்த விடயத்திலும் அவர் சம்பந்தப்படவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறாயினும் இதற்கு பதிலளித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் தோல்வியடைந்து 72 மணிநேரத்திற்கு முன்னர், கட்சியை மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்ததாகவும் தான் கட்சியின் தலைமை பதவியை பெற ஆறு மாதங்கள் ஆனதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மகிந்த ராஜபக்ச சூழ்ச்சிகளை செய்வதில் திறமைகளை கொண்டுள்ள நபர். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளைகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆட்சியில் இருந்த பிரதேச சபைகளை பயன்படுத்தி தன்னை பிரதமராக்குமாறு அழுத்தும் கொடுக்கும் வகையில் யோசனைகளை நிறைவேற்றிருந்தார்.

அதனூடாக கட்சியின் தலைமைக்கு பெரும் அழுத்தங்களை கொடுத்து வந்தார். இதே விதமாக கட்சியின் கீழ் மட்ட பிரதிநிதிகளை பயன்படுத்தி யோசனைகளை நிறைவேற்றி வருவது மகிந்த ராஜபக்சவின் முந்தைய செயற்பாடுகளை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றன

SHARE