“அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அல்லது அமெரிக்கத் தூதரகத்தின் கருத்தை வெளிவிகார அமைச்சே மறுத்திருக்க வேண்டும். – தயான் ஜெயதிலக கு

387

குற்றச்செயல்களுக்குப் பொறுப்புக்கூற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, அமெரிக்கத் தூதரகம், அண்மையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட மறுப்பு விவேகமற்ற செயல் என்று சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அல்லது அமெரிக்கத் தூதரகத்தின் கருத்தை வெளிவிகார அமைச்சே மறுத்திருக்க வேண்டும். அவ்வாறு மறுக்கக் கூடாது என்று வெளிவிவகார அமைச்சுக் கருதும் பட்சத்தில், இன்னொரு அமைச்சு அத்தகைய மறுப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கக் கூடாது. அரசாங்க ஊடகம் ஒன்றில் ஆசிரியர் கருத்தில் அதனை குறிப்பிட்டாலே போதுமானது.

பாகிஸ்தான் நீண்டகாலம் இராணுவ ஆட்சியில் இருந்த போதும் கூட, இன்னொரு நாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில், இத்தகைய அறிக்கைகள் வெளிவந்ததில்லை. இதுபோன்ற விவகாரங்கள், வெளிவிவகார அமைச்சிடமே விடப்பட்டன. இராணுவம் மீது நேரடியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் சூழ்நிலையின் போதே, அனைத்துலக விவகாரங்களுக்கு இராணுவப் பேச்சாளர் பதிலளிக்கலாம்.

உதாரணத்துக்கு, தென்கொரிய விமானத்தை சுட்டுவீழ்த்தினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது, சோவியத் ஜெனரல் நிகொலய் ஒர்காகோவ் செய்தியாளர் மாநாட்டை நடத்தினார். தூதரகங்களின் அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு அல்லது சீருடையணிந்த அதிகாரிகள் மறுப்பது, இராணுவ சர்வாதிகார ஆட்சியின் போது மட்டுமே நடக்கின்ற விடயம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

SHARE