இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. இந்திய பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது இந்த முரண்பாடுகள் ஆரம்பித்ததாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. இந்திய பிரதமருடனான முதல் சந்திப்பின்போது ஜனாதிபதியுடன் அவருடன் இலங்கையில் இருந்து சென்ற அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இதன்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்செய்வது, நல்லிணக்கம் மற்றும் சம்பூர் அனல் மின்சார நிலையத்திட்டம் போன்ற விடயங்கள் குறித்து மோடி தமது வலியுறுத்தல்களை விடுத்திருந்தார். இந்தநிலையில் ஜனாதிபதி இலங்கை திரும்பியவுடன் மேற்கொண்ட நடவடிக்கைகள் மோடியுடனான பேச்சுவார்த்தையின் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தற்போது 13வது திருத்தத்தை பொலிஸ் அதிகாரம் அற்ற நிலையில் அமுல்செய்யக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் சம்பூர் அனல் மின்சார நிலையத்தின் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இவையாவும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முரண்பாடுகளை சுட்டி நிற்பதாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.