இஸ்ரேலுடன் மேலும் 72 மணி நேர போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல்

374
இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீன எல்லையோரம் உள்ள காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் படையினருக்கும் இடையில் கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கிய சண்டை ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்தது.

இதற்கிடையில், இரு தரப்பினருக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டு வரும் எகிப்து நாட்டின் ஆலோசனைக்கு இணங்க 72 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பினரும் சம்மதித்தனர்.

இந்த போர் நிறுத்தத்துக்கு இடையில் இரு தரப்பினரையும் கெய்ரோவுக்கு வரவழைத்து நிரந்தர சமாதானத்தை உண்டாக்கும் வகையில் சமரச பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் ஏதும் முன்னேற்றம் ஏற்பட்டதா? என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

(உள்ளூர் நேரப்படி) இன்று நள்ளிரவோடு போர் நிறுத்த தற்காலிக ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில் பேச்சுவார்த்தை தொடர்வதற்கு வசதியாக மேலும் 72 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை நீட்டிக்கும்படி எகிப்து அரசு கேட்டுக் கொண்டது.

அதற்கிணங்க, 72 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பினரும் ஒப்புதல் அளித்துள்ளதாக ஹமாஸ் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் இஸ்ஸட் அல் ரஷித் அறிவித்துள்ளார்.

காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனியர்களும், 67 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் 429 பேர் அப்பாவி குழந்தைகள் மற்றும் 1,354 பேர் பெண்கள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்கள் என்று ஐ.நா.சபை கணக்கிட்டுள்ளது.

SHARE