அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்டித்து யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கும் எழுக தமிழ் ஊர்வலம் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பரிசோதனை களமாக அமையலாம் என்றும் வடக்கில் அவர்களுக்கான ஆதரவு எவ்வாறு இருக்கிறது என்பதை கணிக்க கூடியதாக இருக்கும் என இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்போது ஜெனிவாவில் தங்கியிருக்கும் சுனந்த தேசப்பிரிய யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கும் எழுக தமிழ் பற்றி தனது கருத்தை வெளியிட்டார்.
சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை, எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, ஆதரவை வழங்குவது அரசியல் தீர்வுத்திட்டத்தை குழப்பும் வகையில் அமைந்து விடுமோ என தாம் அஞ்சுவதாக அவர்கள் காரணம் கூறியிருக்கிறார்கள். ஆனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இது சோதனையும் சவாலும் நிறைந்த காலம் என சுனந்த தேசப்பிரிய வர்ணித்துள்ளார்.
வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை இதனை ஏற்பாடு செய்திருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பியும் இந்த ஊர்வலத்திற்கு ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள பொது அமைப்புக்களும் ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.
வடக்கில் திட்டமிட்ட வகையில் புத்தர் சிலைகளை வைப்பது, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்கள் பற்றிய பிரச்சினை அரசியல் தீர்வு ஆகியவற்றை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சி மட்டும் இது பற்றி எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இந்த மௌனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி உள்ளதாக ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மக்கள் தங்கள் கூட்டு எதிர்ப்பை அரசாங்கத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவி ஏற்ற போதிலும் இராணுவ ஆக்கிரமிப்பு நீடிப்பதாகவும் கைதிகள் விடுதலை, காணாமல் போனவர்கள் பற்றி முடிவின்மை, தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுதல் போன்றவற்றால் தமிழ் மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளார்கள் என விக்கினேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
10ஆயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள மக்கள் வவுனியா யாழ்ப்பாணம் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் தற்போது குடியேற்றப்பட்டிருப்பதாகவும் யுத்தத்திற்கு முன்னர் இவ்வளவு தொகை சிங்கள மக்கள் வடபகுதியில் இருந்ததில்லை என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசின் மீது நம்பிக்கையீனம் அதிகரித்து வருவதால் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல சம்பந்தன் தலைமையிலானவர்களுக்கும் நெருக்கடியான ஒரு நிகழ்வுதான் என சுனந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.