ஓடும் ரெயிலில் கற்பழிக்கப்பட்டு வெளியே வீசப்பட்ட 13 வயது தாய்லாந்து சிறுமி மரணம்

440
ஓடும் ரெயிலில் 13 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு, வெளியே தூக்கி வீசப்பட்டு பலியான சம்பவம் தாய்லாந்து நாட்டில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் தெற்கு மாகாணங்களில் ஒன்றான சுரட் தனி-யில் நோய்வாய்பட்டு கிடக்கும் பாட்டியை பார்த்து நலம் விசாரித்து விட்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக தலைநகர் பாங்காக் செல்லும் ரெயிலில் தனது சகோதரிகளுடன் அந்த சிறுமி திரும்பிக் கொண்டிருந்தார்.

நீண்ட தூரமுள்ள அந்த பயணத்திற்கிடையில், கடந்த சனிக்கிழமை இரவு ரெயிலின் ‘பெர்த்’களில் அந்த சகோதரிகள் படுத்து தூங்கினர். காலையில் கண் விழித்து பார்த்த அவர்கள் தங்களுடன் வந்த 13 வயது தங்கையை காணாமல் பதறிப் போயினர்.

பாங்காங் திரும்பிய அவர்கள் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை கிரிகான் மாகாணம், ப்ரன்புரி மாவட்டத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் உடல் முழுக்க காயங்களுடன் அந்த சிறுமியின் பிணம் கிடந்தது. பிரேத பரிசோதனையில் அந்த பெண் கற்பழித்து ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டது தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக ரெயில்வே ஊழியர் ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவம் தாய்லாந்து மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப்போன்ற சம்பவங்களுக்கு எதிராக கடுமையான தண்டனையை கொண்டு வர வேண்டும் என்று அரசை வலியுறுத்தும் ‘ஆன்லைன்’ போராட்டத்தில் ஒரே நாளில் 15 ஆயிரம் கையொப்பங்கள் குவிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE