காலம் கடந்த பின் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கொண்டாடிய C.V விக்கினேஸ்வரன்

564

images

பல்வேறு நெருக்குதல்களைத் தாண்டி வடக்கு மாகாண சபை உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற வடமாகாணசபையின் ஒத்திகை கூட்டத்தில் அரச கட்டடங்களில் தீபமேற்றுவதை தவிர்க்க வேண்டும் எனவும், தேவையாயின் கறுப்பு பட்டி அணிந்து அமர்வில் பங்கெடுக்க ஆலூசனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

 

எனினும் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி மற்றும் கஜதீபன் ஆகியோருடன் அமைச்சர் ஜங்கரநேசனும் தீபமேற்ற வேண்டியதை வலியுறுத்தியதுடன் மக்களது எதிர்பார்ப்பு அதுவென வலியுறுத்தினர். எனினும் பல்வேறு கருத்துகள் வாதப் பிரதிவாதங்கள் இடையே  அம்முயற்சி கைவிடப்பட்டு கறுப்பு பட்டியணிவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் 9ஆவது அமர்வு கைதடியில் உள்ள சபை கட்டடத்தில்; ஆரம்பமாகிய வேளை சிவாஜிலிங்கம் தன்னால் எடுத்து வரப்பட்ட மெழுகுதிரிகளை அனைவரிடமும் வழங்கி தீபமேற்றி மௌன அஞ்சலிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனையடுத்து அமைச்சர்களான குருகுலராசா மற்றும் ஜங்கரநேசன உள்ளிட்ட உறுப்பினர்களால் சபையில் கறுப்புப்பட்டி அணிந்து தீபமேந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினரான முஸ்லீம் காங்கிஸை சேர்ந்த ரயீஸ் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். அத்துடன் எதிர்க்கட்சித்தலைவர்  தவராசா பங்கெடுப்பதா இல்லையாவென்பது பற்றி முடிவெடுக்க முடியாது வெளியே சென்றிருந்தார்.
இதேவேளை சபை அமர்வில் கலந்து கொண்ட வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தனது உரையினை உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், லிங்கநாதன், பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன், அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் தவராசா ஆகியோரும் உரையாற்றியிருந்தனர்.

SHARE