காஸா கடற்கரை பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை: 4 சிறுவர்கள் பலி

445
காஸா பகுதியில் நடத்தி வரும் தாக்குதல்களை மனித நேய அடிப்படையில் தற்காலிகமாக 6 மணி நேரம நிறித்தி வைப்பதாக அறிவித்த இஸ்ரேல் நாட்டின் விமானப்படை, அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த நேரத்துக்கு முன்னதாக காஸாவின் கடற்கரை பகுதியில் நடத்திய தாக்குதலில் 4 சிறுவர்கள் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.சில நாட்களுக்கு முன்னர், காஸாவின் துறைமுகம் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்திய கடற்கரை பகுதியில் நேற்று சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் முந்தைய தாக்குதலில் வெடித்து சிதறிய உலோகங்களை சேகரித்துக் கொண்டிருந்தனர்.

அங்கு கேட்பாரற்று கிடந்த ஒரு கண்டெய்னரின் பின்புறம் அவர்கள் ஓடிப் பிடித்து விளையாடிய போது அப்பகுதியை வட்டமிட்ட இஸ்ரேல் போர் விமானம் மேலே இருந்து குண்டுகளை வீசியது.

இதில் அந்த கண்டெய்னர் வெடித்து சிதறியது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 சிறுவர்களும் சில பெரியவர்களும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த உயிரிழப்பு ஒரு சோகமான நிகழ்வு என்று தெரிவித்துள்ள இஸ்ரேல், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பலியான ஹமாஸ் மக்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ள நிலையில், ’இஸ்ரேலின் தாக்குதல் எச்சரிக்கைக்கு பயந்து, காஸாவில் இருக்கும் எங்கள் வீடுகளை விட்டு வெளியேற மாட்டோம். செத்தாலும், போராடி இங்கேயே தான் சாவோம்’ என்று இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் பலர் நெஞ்சுறுதியுடன் கூறுகின்றனர்.

SHARE